தமிழகம் முழுவதும் ஏப். 16-ம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

தமிழகம் முழுவதும் ஏப். 16-ம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

Share it if you like it

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் எதிர்வரும் 16-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சீருடை பேரணி நடைபெறும் என்று, அவ்வமைப்பின் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து வன்னியராஜன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) 1925-ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் நிறுவப்பட்ட அமைப்பாகும். நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதே இச்சங்கத்தின் லட்சியம். தொடக்க காலத்தில் இருந்தே விஜயதசமியை ஒட்டி, சீருடை அணிவகுப்புப் பேரணி நடத்துவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கமாகக் கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் இச்சீருடைப் பேரணியை வருடாந்திர நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.

இந்நிகழ்வுக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கத் தயங்குவதையும், மறுப்பதையும் தொடர்ந்து கண்டு வருகிறோம். இதனால், ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அனுமதி பெற்று ஆர்.எஸ்.எஸ். தனது சீருடைப் பேரணியை நடத்தி வருகிறது.

கொரோனா தொற்றுக்காலம் என்பதால், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தனது வழக்கமான சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ். நடத்தவில்லை. 2022-ல் கொரோனா தொற்றிலிருந்து நாடு விடுபட்டதை அடுத்து, அந்தாண்டு விஜயதசமியை ஒட்டி சீருடைப் பேரணியை ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் நடத்தியது. அப்போது, தமிழ்நாட்டிலும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி  சீருடைப் பேரணியை நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே காவல்துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

விண்ணப்பித்து பல நாட்களாகியும் அரசும், காவல் துறையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி தராமல் இழுத்தடித்தனர். செப்டம்பர் 3-வது வாரம் வரை அரசு பரிசீலிக்காததால், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு கோரி, அமைப்பின் நிர்வாகிகளால் சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு 2022 செப்டம்பர் 22-ல் உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உயர் நீதிமன்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ் கட்சி  உள்ளிட்டவை விமர்சனம் செய்ததோடு, அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அரசை நிர்பந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த 50 சீராய்வு மனுக்களையும் தனி நீதிபதி நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில், 2022 செப்டம்பர் 22-ம் தேதிய உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று பேரணிக்கு அனுமதி வழங்காத காவல் துறையைக் கண்டித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் 50 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த மனுக்களின் மீதான விசாரணயின்போது, கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி, ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவகுப்பின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பாதுகாப்புக் கருதி, அந்த அமைப்பின் சீருடை அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை கூறியது.

இந்த அறிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி, செப்டம்பர் 21-ம் தேதிய நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்தார். அதன்படி, 23 இடங்களில் மட்டும் சுற்றுச்சுவருக்கு உள்பட்ட வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்தலாம் என்றும், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி அளிக்க முடியாது என்றும் நவம்பர் 2-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதேசமயம், தமிழ்நாடு அரசு, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் மட்டும் திறந்தவெளியில் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, 2022 நவம்பர் 6-ம் தேதி மேற்கூறிய 3 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சீருடைப் பேரணியை நடத்திவிட்டது. அந்த இடங்களில் எங்கேயும் எந்த விரும்பத் தகாத சம்பவமும் நடக்கவில்லை.

இதையடுத்து,  தனி நீதிபதி முந்தைய தீர்ப்பை மாற்றியதை எதிர்த்தும், வெளிப்படையாக சாலையில் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கோரியும், ஆர்.எஸ்.எஸ். சார்பில் மீண்டும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சில் (அமர்வு நீதிமன்றம்) 45 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்ததுடன்,  2022 செப்டம்பர் 22-ம் தேதி அளிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2023 பிப்ரவரி 10-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 12,  19, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவதொன்றில் பேரணி நடத்த அனுமதி அளிக்குமாறு உயர் நீதிமன்ற உத்தரவைக் காட்டி ஆர்.எஸ்.எஸ். காவல் துறை தலைவரிடம் (டி.ஜி.பி.) மீண்டும் மனு செய்தது.

ஆனால், அனுமதி அளிக்கப்படவில்லை. அதேசமயம்,  இந்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.யின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் 2022 செப்டம்பர் 22-ல் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட்ட தீர்ப்பை, ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

இத்தீர்ப்பின் நகலுடன் தமிழ்நாடு மாநில டி.ஜி.பி.யை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள் 13-ம் தேதி சந்தித்தனர். ஏப்ரல் 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி அளிக்குமறு மீண்டும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்று, 2023 ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்புப் பேரணிக்கு அனுமதி அளித்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களை அந்தந்த மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சந்தித்து தேவையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதிலும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, காவல் துறையின் அனுமதியுடன், வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையின்போது தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், அரசு கூறியுள்ள வழக்குகளின் விவரங்களை பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குற்றவாளிகள் அல்ல என்பதும், அவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது என்று குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றும் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டங்களையும் மதித்து நடக்கும் பேரியக்கம் ஆகும். இதனால்தான் சட்டம் ஒழுங்கைக் காக்கும் அமைப்புகளின் அனுமதி பெற்றே பேரணிகளை இதுவரை நடத்தி வந்திருக்கிறது. எனினும், அரசு அனுமதி அளிக்காதபோது, தனது சட்டப்பூர்வமான உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடி, தனது அடிப்படை உரிமையை நிலைநாட்டி, தற்போது சீருடைப் பேரணியை நடத்த உள்ளது. இந்த அணிவகுப்புப் பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அன்புடன் அழைக்கிறது. இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நன்றி கூறுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் இடங்கள்:- சென்னை (கொரட்டூர்), ஊரப்பாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, ஆம்பூர், வேலூர், தருமபுரி, ஓசூர், ஆத்தூர், சேலம், நாமக்கல், கோபிசெட்டிபாளையம், நீலகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், பல்லடம், கரூர், பொள்ளாச்சி, மூலனூர் (திருப்பூர்), பழனி, சின்னமனூர், அம்பாசமுத்திரம், தென்காசி, நாகர்கோயில், அருமனை (கன்னியாகுமரி), ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி (கரம்பக்குடி), திருமங்கலம், மதுரை, திருச்சி, அரியலூர், கந்தர்வக்கோட்டை, சிவகங்கை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வேதாரண்யம், விழுப்புரம்.


Share it if you like it