போட்றா வெடிய – காற்றுமாசு ஏற்பட பட்டாசு மட்டும் தான் காரணமா?

போட்றா வெடிய – காற்றுமாசு ஏற்பட பட்டாசு மட்டும் தான் காரணமா?

Share it if you like it

“தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

தியானம், யோகா-வை உலகம் முழுவதும் கொண்டு சென்றவரும், கோவை மாவட்டத்தில் ஈஷா மையம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவி தொடர்ந்து நடத்தி வருபவருமான ஜக்கி வாசுதேவ் அவர்கள். காற்று மாசு ஏற்படும் என்பதை காரணம் காட்டி குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும் சந்தோஷத்திற்கு தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. நீங்கள் அவர்களின் மகிழ்ச்சிக்காக 3 நாட்கள் தங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள் குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கி விடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.

ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

“அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்..


Share it if you like it