சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை !

சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை !

Share it if you like it

தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கியுள்ளார். தீபாவளிப் பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பான முறையில் பட்டாசுவெடிப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை காவல் ஆணையர் வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.

பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்கக் கூடாது. இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கரவாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக் கூடாது.

மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக் கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.

:குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.

எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக் கூடாது.

பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக் கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ பட்டாசு வகைகளைக் கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட்துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

ஊதுவத்தி கொளுத்த கூடாது:பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவத்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.

பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக் கூடாது.

பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி களை உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடும்பொழுது வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும்,பாதசாரிகள் மீதும் முட்டி விபத்து நேரிடலாம், எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள்வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகளுக்குபெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துரைத்துரைக்க வேண்டும்.

மேலும், தீ விபத்து அல்லதுபட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல் துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவஉதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108,தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாகத் தொடர்புகொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.


Share it if you like it