ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர், டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால், இவர் பெரும்பாலும் டெல்லியிலுள்ள வீட்டில்தான் தங்கி இருப்பார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ரிஷபனூருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு ராமசாமி, தனது வீட்டில் தங்கி இருந்த நிலையில், யாரோ மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இன்று காலை எழுந்து பார்த்தபோதுதான், வீட்டின் முன்பக்க கேட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. எனினும், அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருக்கிறது. மேலும், வீட்டின் சுவற்றில் கருப்பு மையை மர்ம நபர்கள் ஊற்றி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதோடு, வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியையும் கட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி, இதுகுறித்து சாலைகிராமம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., சி.பி.சாய் சௌந்தர்யன், சாலைகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டபோது, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், பிரமுகர்கள் வீடுகளில் இதேபோல நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it