அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (ஜன.22) பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். இந்நிலையில் கோயிலில் இன்று (ஜன.23) காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தேனீயை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட காவி கொடியுடன் தாய்லாந்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.