கேம்பிரிட்ஜை உலுக்கிய சரித்திர நாயகன் ராமானுஜம்

கேம்பிரிட்ஜை உலுக்கிய சரித்திர நாயகன் ராமானுஜம்

Share it if you like it

கணித மேதை ராமானுஜம்

(பல நூறாண்டு காலமாக, அந்நியர்கள் ஆட்சி செய்த போதும், முழுக்க முழுக்க நமது நாட்டில் பணி புரிந்து, உலகின் மிக உயர்ந்த கவுரவத்தைப் பெற்றதுடன், உலகளவில் நமது நாட்டைப் பெருமையடையச் செய்தார்)

https://youtu.be/B2Fov3FedEk

டிசம்பர் 22, 1887 ஆம் ஆண்டு, ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே, கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பல வித கணக்குகளை போட்டு, அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு, தூங்கும் போதும், கனவில் விடை கண்டு பிடிப்பார், அந்த அளவுக்கு கணிதத்தை நேசித்தவர்.

எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தார். 9 ஆம் வகுப்பிலேயே, பட்டப் படிப்பின் கணக்குகளுக்கு தீர்வு கண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில், ராமானுஜம் கணித மேதையாக உயர,  ஊக்கம் அளித்தது.

கும்பகோணம் அரசு கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படிக்கும் போது, கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக, மூன்று முறை ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றார். பின்நாளில், குறுகிய காலங்களிலேயே, 1914 ஆம் ஆண்டு  முதல் 1918 ஆம் ஆண்டு வரை, 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டு பிடித்தார்..

ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதி வைத்தார். அதுவே பிற்காலத்தில், “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ் பெற்ற நூலானது. 1909-ல் கணித மேதை ராமானுஜத்திற்கு திருமணமானது, மனைவி ஜானகி. குடும்பஸ்தர் ஆன நிலையில், வேலைக்கு செல்ல வேண்டியதாயிற்று. இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துக் கொண்டே, ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத் துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். இதனால், உலகமே இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது.

இதை அறிந்த ஆங்கிலேயர், கணித குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற அவர், 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று, பல கணித மேதைகளுடன் உரையாடினார். அங்கு கிடைத்த உதவித் தொகை மூலம், “டிரினிட்டி கல்லூரி”யில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில், 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி, உலக அளவில் புகழ் பெற்றார்.

மார்ச் 16, 1916 ஆம் ஆண்டு, ராமானுஜம் அவர்கள், அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தை, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார். அவருக்கு சரியான தகுதிகள் இல்லாத போதிலும், 1914 ஜூனில் நடந்த சேர்ப்பில் அனுமதிக்கப் பட்டார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப் பட்டது.

ராமானுஜத்தை “ராயல் சொசைட்டி உறுப்பினராக” தேர்ந்தெடுத்து, இங்கிலாந்து நாடு பெருமைப் படுத்தியது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், “பெல்லோஷிப்” பதவியும் அவருக்கு கிட்டியது. 33 வயதை கடப்பதற்குள், காலம் ராமானுஜத்தை, கவர்ந்து சென்று விட்டது. குறுகிய காலத்தில், கணித மேதை ராமானுஜம் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று, சரித்திரம் படைத்து இருக்கிறது.

ராமானுஜம் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான், இன்றைய “ஆன்டிராய்ட்” யுகத்தின் அனைத்து துறையிலும் பயன் படுகிறது என்பதை மறுக்க முடியாது. ராமானுஜத்தை பற்றி, இந்தியாவின் நூலக தந்தை அரங்கநாதன் குறிப்பிடும் போது, ‘ஒரு ஜோதி, ராமானுஜத்தை ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவருக்கு, தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது’ என்றார்.

ஜெர்மனியும், சுவீடனும் ஆண்டு முழுவதும் “கணித மேதை ராமானுஜம்” என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கும் மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் நமது நாட்டினரின் பெருமை, உலக அளவில் போற்றப் படுகிறது.

2012-ம் ஆண்டு ராமானுஜரின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை, “தேசிய கணித ஆண்டாகவும்”, அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ந் தேதியை, “தேசிய கணித தினமாகவும்” அறிவித்தது. அன்று முதல், ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22-ந்தேதியும் “கணித தினம்” கொண்டாடப் படுகிறது.

– குமார் மாணிக்கம்


Share it if you like it