22 சுவாமி சிலைகள் உடைப்பு: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

22 சுவாமி சிலைகள் உடைப்பு: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

Share it if you like it

ஸ்ரீபெரும்புதுார் அருகே 2 கோவில்களில் இருந்த 22 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ளது துளசாபுரம் ஊராட்சி. இங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரக சிலைகள், முருகர், தட்சிணாமூர்த்தி, பார்வதி, துர்கை, நாகாத்தம்மன் மற்றும் 3 சிறிய விநாயகர் சிலைகள் உள்ளிட்ட கற்சிலைகள் இருந்தன. இந்த சிலைகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதோடு, கோவிலுக்கு வெளியே உள்ள சாலையில் வீசி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, இந்த கோவிலில் இருந்து சுமார் 50 மீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் சிமென்டால் அமைக்கப்பட்டிருந்த 2 துவாரபாலகர் சிலைகள், 2 பெண் காவல் தெய்வங்களின் சிலைகள், கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் சிங்க சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், கோவிலின் முன்புறம் இருந்த இரும்பு சூலம் இரண்டாக உடைக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. அப்போது, துளசாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஹிந்து கடவுள்களின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. ஆகவே, ஹிந்து கடவுள்களின் சிலைகளை குறிவைத்து உடைக்கும் மர்ம நபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி, துளசாபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சுங்குவார்சத்திரம் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். தகவலறிந்த ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி. சுனில், சிலைகள் உடைக்கப்பட்ட கோவில்களை பார்வையிட்டதோடு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.


Share it if you like it