இந்தியாவின் கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் – மோடி !

இந்தியாவின் கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் – மோடி !

Share it if you like it

ஒரே இந்தியா உன்னதமான இந்தியா” என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு காண்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மத்திய அரசின் ‘நாட்டை அறிந்து கொள்ளுங்கள் இளைஞர் பரிமாற்றத் திட்டம் 2023’-ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் 250 பேர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் புதுடெல்லிக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில், புதுடெல்லிக்கு வந்த மாணவர்களை பாரதப் பிரதமர் மோடி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் பயண அனுபவம் மற்றும் பார்வையிட்ட புகழ்பெற்ற இடங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மேலும், ஜம்மு காஷ்மீரின் வளமான விளையாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் விவாதித்தார். தவிர, கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியை பிரதமர் உதாரணம் காட்டினார். அதோடு, ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களின் திறமையைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

அதேபோல, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இது தவிர, சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 திட்டத்தின் வெற்றி குறித்து மாணவர்களுடன் விவாதித்த பிரதமர் மோடி, மேற்கண்ட அறிவியல் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளன என்றார். மேலும், இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது குறித்து பேசிய பிரதமர், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார். குறிப்பாக, யோகாவின் நன்மைகள் குறித்து பேசிய பிரதமர், மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காஷ்மீரில் ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், நாட்டை தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான இரயில்வே பாலம் கட்டப்படுவது குறித்து பேசிய பிரதமர், இது பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்றார்.


Share it if you like it