சிறைக்குச் சென்றால்தான் கட்சி வளரும்: அண்ணாமலை நச்!

சிறைக்குச் சென்றால்தான் கட்சி வளரும்: அண்ணாமலை நச்!

Share it if you like it

கைது செய்தால் பா.ஜ.க. வளர்ச்சியை தடுக்கலாம் என்று நினைப்பது தவறு. கைது செய்தால்தான் கட்சி வளரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது. பா.ஜ.க. செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் வேத.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பா.ஜ.க.வினர். தமிழகம் முழுவதுமுள்ள சிறைகள் ஒவ்வொன்றிலும், ஒரு பா.ஜ.க.வினராவது இருக்கின்றனர்.

கைது செய்தால் பா.ஜ.க. வளர்ச்சியை தடுக்கலாம் என்று நினைப்பது தவறு. கைது செய்தால்தான் கட்சி வளரும். ஒரு நாள் சிறைக்குச் சென்று வந்தால் ஒரு வருட கட்சிப் பணியை செய்ததற்கு சமம். தி.மு.க. அரசால் கைது செய்யப்பட்டால் அடுத்த 6 மணி நேரத்தில் பா.ஜ.க.வினர் வெளியே வந்து விடுவார்கள். அந்தளவிற்கு பா.ஜ.க. சட்டப்பிரிவு வலிமையாக இருக்கிறது. தி.மு.க.வினர் போல் கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என்று கூறவில்லை.

பிரதமரின் அமெரிக்க பயணம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச் செய்யும். வெளிநாட்டு பயணத்தில் இருந்து, 3,000 கோடி ரூபாய் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். சத்தியமாக அது வராது. கோட் போட்டால் மோடியாக முடியாது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஆட்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வினர் அடித்த கொள்ளையைப் பார்த்து, காங்கிரஸ் கட்சியினரே பயந்து விட்டனர். அதனால்தான், 2009-ல் மத்திய அமைச்சரவையில் டி.ஆர்.பாலுவிற்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 55 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  தி.மு.க.வை பார்த்தாலே அகில இந்திய தலைவர்கள் ஓடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.தான் ஆட்சியை பிடிக்கும். மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. ஆனால், வெற்றிபெறும் தொகுதிகள்தான் இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியிருக்கிறார். 


Share it if you like it