யூ2புரூட்டஸை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்!

யூ2புரூட்டஸை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்!

Share it if you like it

ஹிந்து கடவுள் சிவபெருமானை அவமதித்தவரை தமிழக அரசு கைது செய்து, அந்த சேனலை முடக்காவிட்டால் சிவனுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம். காசியில் இருந்து பல லட்சம் அகோரிகளை வரவழைத்து போராடுவோம் என்று ராமநாதபுரம் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ கணேசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரும், திராவிடர் கழகத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மட்டுமே செய்து வந்த இந்த இழிச்செயலை, சமீபகாலமாக கருப்பர் கூட்டம் என்கிற பெயரில் செயல்படும் ஒரு கும்பலும் செய்யத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவன், கந்தசஷ்டி கவசத்தைப் பற்றியும், முருகனின் வேல் பற்றியும் மிகவும் கேவலமாக விளக்கம் கொடுத்து, ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தான். இதையடுத்து, ஹிந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில், சுரேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டான். இதன் பிறகு, கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கி வாசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘U2Brutus’ என்கிற பெயரில் ட்விட்டரில் இயங்கிவரும் மைனர் விஜய் என்பவன், தில்லை நடராஜர் நடனமாடுவது குறித்து மிகவும் ஆபசமாகவும், கொச்சையாகவும் விளக்கம் கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தான். இதுகுறித்து ஏராளமான புகார்கள் சென்றதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விட்டது. மேலும், இது தொடர்பாக மைனர் விஜய் மீது போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. ஆனால், போலீஸார் இதுவரை அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தை சிவனடியார்கள் கூட்டம் கையில் எடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் சென்று மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் எஸ்.பி.க்களிடம் U2Brutus மீது புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்த சிவனடியார்கள் மேற்படி மைனர் விஜய்யை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ கணேசன் கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் குறித்து U2Brutus என்கிற யூடியூப் சேனலில் மைனர் என்கிற பெயரில் அவதுாறாக வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி தமிழகத்திலுள்ள 38 மாவட்டஎஸ்.பி.க்களிடமும் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் மனு அளித்து வருகிறோம். அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருக்கிறோம். இந்தியாவிலுள்ள 6 கோடி சைவர்கள், வைணவர்களின் மனதை புண்படுத்தியும், மதத்தை கொச்சைப்படுத்தியும் வீடியோ வெளியிட்ட நபர் மீது தமிழக அரசும், போலீஸாரும் கைது நடவடிக்கை எடுத்து சேனலை முடக்க வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும். இதையும் கண்டுகொள்ளாவிட்டால் காசியில் இருந்து பல லட்சம் அகோரிகளை வரவழைத்து போராடுவோம். சிவனடியார்களாகிய நாங்கள் தீக்குளித்து உயிர் தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம்” என்றார்.

இந்த விவகாரத்தில் சிவனடியார்கள் களத்தில் குதித்திருப்பது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


Share it if you like it