மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளர் முகமது அன்சாரி கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளர் முகமது அன்சாரி கைது!

Share it if you like it

தென்காசியில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி, பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசியில் தனியாருக்குச் சொந்தமான பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தாளளராக முகமது அன்சாரி என்பவர் இருந்து வருகிறார். இக்கல்லூரியில் நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தென்காசி, குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கல்லூரி தாளாளர் முகமது அன்சாரி, பாவூர் சத்திரம் மாணவிக்கு செல்போன் மூலம் ஆபாசமாக பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதை மாணவி பலமுறை கண்டித்து வந்திருக்கிறார். ஆனாலும், முகமது அன்சாரி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த சூழலில், நேற்று முன்தினம் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்திருக்கிறார் முகமது அன்சாரி. மாணவியும் சென்றிருக்கிறார். அப்போது முகமது அன்சாரி, மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார்.

இதற்கு மாணவி எதிர்ப்புத் தெரிவித்து அங்கிருந்து வெளியேற முயன்றிருக்கிறார். ஆனால் முகமது அன்சாரி, மாணவியை வெளியேற விடாமல் தடுத்ததோடு, மெதுவாக மாணவியை நெருங்கி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அங்கிருந்து கதறியபடி வெளியே ஓடிவந்திருக்கிறார். பின்னர், வீட்டுக்குச் சென்று தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்த குடும்பத்தினரிடம் கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அந்த மாணவி பெற்றோருடன் சென்று சம்பவம் குறித்து குற்றாலம் போலீஸில் புகார் செய்திருக்கிறார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முகமது அன்சாரியை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it