தமிழகத்தில் நிக்ஜாம் புயலினால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கடந்த பின்பும் இன்றளவும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. மேலும் மின்சாரம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி போன்ற சில தன்னார்வ அமைப்புகளும் உணவுகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சில வஞ்சக ஆட்கள் அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர் விலையை 200,250 என்கிற அளவில் விற்பனை செய்து வருகின்றனர். வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களை படகில் காப்பாற்ற 2500 ரூபாய் வாங்கும் அவலமும் சென்னையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரண நிதியாக 5 ஆயிரம் கோடி கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண தொகுப்பிலிருந்து 450 கோடி ரூபாயும், நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடியும் ஒதுக்கியுள்ளது. அதாவது புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு 1011.29 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.