அலைக்கற்றை திருட்டில் சஜீர், முகமது ஆசிப் கைது! சர்வதேச சதி இருக்குமோ போலீஸ் சந்தேகம்?

அலைக்கற்றை திருட்டில் சஜீர், முகமது ஆசிப் கைது! சர்வதேச சதி இருக்குமோ போலீஸ் சந்தேகம்?

Share it if you like it

தேனியில் பி.எஸ்.என்.எல். அலைக்கற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த சஜீர், முகமது ஆசிப் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சர்வதேச சதி இருக்குமோ என்று போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

தேனி – பெரியகுளம் சாலையில் ஒரு தனியார் ஸ்கேன் மையம் இருக்கிறது. இதற்கு பின்புறமுள்ள ஒரு குடியிருப்பில் சந்தேகப்படும்படியான நபர்கள் வசிப்பதாக உளவுத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உளவுத்துறை போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, மேற்கண்ட மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் இருந்து நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அலைக்கற்றைகளை திருடி, வெளிநாடுகளுக்கு பேசி வருவது தெரியவந்தது. இதுகுறித்து உளவுத்துறை தரப்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேனி பி.எஸ்.என்.எல். அலுவலக தொழில்நுட்ப பிரிவு அதிகாரி முனியாண்டி தேனி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு போலீஸ் டீம் சென்றது. ஆனால், அந்த வீடு பூட்டி இருந்தது. எனவே, வீட்டின் கதவை உடைத்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் அலைக்கற்றைகளை திருடும் நவீன தொழில்நுட்ப கருவிகள், ஏராளமான சிம் கார்டுகள் இருந்தன. இதைக் கண்டு போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், அலைக்கற்றை திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சஜீர் (41), முகமது ஆஷிப் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, மேற்படி நபர்கள் இருவரும் தேனியில் இன்னொரு வீட்டிலும், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் 2 வீடுகளிலும் இதேபோல தொழில்நுட்ப கருவிகளை வைத்து பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் டவர்களில் இருந்து அலைக்கற்றைகளை திருடி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 3 வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் அலைக்கற்றைகளை திருடுவதற்கான 31 நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, சஜீர், முகமது ஆஷிப் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த விவகாரம் பெரிய அளவில் இருந்ததால், இதில் சர்வதேச சதி இருக்குமோ என்று போலீஸார் சந்தேகமடைந்தனர். இதைத் தொடர்ந்து, தென்மண்டல ஐ.ஜி. அஷ்ராகார்க் தேனிக்கு வந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் மத்திய உளவுப்பரிவு, மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள், க்யூ பிரிவு போலீஸாரும் தேனிக்கு வந்து 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், 2 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கண்ட இருவரும் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. ஆகவே, இதற்கு பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆகவே, கைதான நபர்களுக்கு பயங்கரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? எதற்காக இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடுபட்டார்கள்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it