ஒரே போடு… தலை ரெண்டா போயிரும்… போலீஸாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி போதை ஆசாமிகள் ரகளை!

ஒரே போடு… தலை ரெண்டா போயிரும்… போலீஸாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி போதை ஆசாமிகள் ரகளை!

Share it if you like it

தேனி அருகே விசாரணைக்குச் சென்ற போலீஸாரை, 2 இளைஞர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ​அடுத்த ​தென்கரை பட்டாளம்மன் கோயில் அருகே உள்ளது தோட்டி காலனி. இப்பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன், காமராஜ் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இரு​ந்து வருகிறது. இந்த சூழலில், சம்பவத்தின்று தீபக் ரவிச்சந்திரனும், காமராஜும் கஞ்சா மற்றும் மது போதையில் அரிவாள், கத்தியுடன் பிரபாகரனின் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளைக் கூறி ​தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த சமயத்தில்,​ பிரபாகரன் வீட்டில் இல்லாததால், அவரது​​ தங்கை ஹேமலதா வெளியே வந்த தட்டிக் கேட்டிருக்கிறார்.

அப்போது, இருவரும் சேர்ந்து ஹேமலதாவின் ஆடையை கத்தியால் கிழித்திருக்கின்றனர். மேலும்​, வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஹேமலதா, அவசர போலீஸ் எண் 100-க்கு அழைத்து புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது தாயாரை அழைத்துக்கொண்டு, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன், தினேஷ் ஆகிய 2 போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக சென்றனர்.

அங்கு தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீபக் ரவிச்சந்திரன், காமராஜ் ஆகிய இருவரும் இடுப்பில் 2 டின் பீர்​ டப்பாக்​களை வைத்துக்கொண்டு, யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெருவுக்குள் வந்தீர்கள் என்று போலீஸாரின் சட்டையை பிடித்துக் கேட்டதோடு, ஜாதி பெயரை சொல்லி திட்டினீர்கள் என்று உங்கள் மீது வழக்கு தொடர்வோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள். இதை​ போலீஸார் இருவரும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தீபக் மற்றும் காமராஜ் ஆகியோர் போலீஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, காமராஜ் தனது ​டூவீலரில் வைத்திருந்த அ​ரி​​வாளை எடுத்து வந்து, ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போயிடும் என்று மிரட்டனார்.

இதையடுத்து,​ ​​அருகிலிருந்தவர்கள் காமராஜை தடுத்து நிறுத்தியதோடு, ​போலீஸாரை அங்கிருந்து ​அனுப்பி வைத்த​னர். ​தகவலறிந்த தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு ​சம்பவ இடத்துக்குச் சென்று தீபக்​ ​ரவிச்சந்திர​னை கைதுசெய்தார். தகவலறிந்து தப்பியோடிய காமராஜை போலீஸார் தேடிவருகின்றனர். ​விசாரணைக்குச் சென்ற ​போலீஸாரை, போதை ஆசாமிகள் அரிவாளால் வெட்டமுயன்ற சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற​து.


Share it if you like it