திருப்பரங்குன்றம் மலைக்குகையில் அதிசயம்: 2,200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பரங்குன்றம் மலைக்குகையில் அதிசயம்: 2,200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Share it if you like it

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு புதிதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் முருகன் கோயில்தான் அறுபடை வீடுகளில் முதன்மையானது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானில் அறுபடை வீடுகளில் 4 வீடுகள் மலை மீது அமைந்திருக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் மட்டும் மலையைக் குடைந்து முருகன் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது. முருகன் கோயில் அமைந்திருக்கும் இந்த திருப்பரங்குன்றம் மலைக்குன்று முழுவதும் வரலாற்று சிறப்புடையதாகத் திகழ்கிறது. இந்த மலைக்குன்றில் முற்கால பாண்டியர்களின் குடைவரைக் கோயில்கள் பலவும் இருக்கின்றன.

அதேபோல, திருப்பரங்குன்றம் குன்றின் மேற்குச் சரிவில், இயற்கையாக அமைந்த 2 குகைகள் உள்ளன. இதில், மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு. 1 மற்றும் கி.பி. 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், மேலே உள்ள குகைக்குச் செல்லும் வழியில், இடதுபுறம் ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுக்கைகள் உள்ளன. இக்குகையின் விதானத்தின் மேற்கு பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்துவரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டறிந்தார்.

இதுகுறித்து, பாலமுரளி அளித்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று கல்வெட்டை படி எடுத்தனர். பின்னர், தமிழக அரசின் ஓய்வுபெற்ற தொல்லியலாளர் சாந்தலிங்கம் துணையுடன் படியெடுத்த கல்வெட்டை படித்து பார்த்ததில், அது சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு என்பது தெரியவந்திருக்கிறது. இக்கல்வெட்டில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் வரியில் த, ர போன்ற எழுத்துகள் தவிர மற்றவை சிதைந்துள்ளன. 2-வது வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன.

மேலும், குகையில் வெட்டப்பட்டுள்ள 5 கற்படுக்கைகளைக் குறிக்க, 5 என்ற எண்ணுக்குப் பதிலாக 5 கோடுகள் வெட்டப்பட்டுள்ளன. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுக்கைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளதுபோல், இங்கு 5 கோடுகள் வரையப்பட்டுள்ளன. கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருப்பது, ‘அ, ர’ போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, 5 என்ற எண்ணைக் குறிக்க 5 கோடுகளை செதுக்கியிருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதும் தெரியவந்திருக்கிறது. இக்கல்வெட்டு கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Share it if you like it