துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: 600-க்கும் மேற்பட்டோர் பலி!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: 600-க்கும் மேற்பட்டோர் பலி!

Share it if you like it

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கியை பொறுத்தவரை, உலகின் மிகவும் தீவிரமான நிலநடுக்க மண்டலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு, 1999-ம் ஆண்டு நாட்டின் வடமேற்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சூழலில், இன்று அதிகாலை 4.17வ மணியளவில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியில், ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் காஸியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்திருக்கிறார். காஸியான்டெப்பின் வடகிழக்கில் உள்ள மாலத்யா மாகாணத்தில் குறைந்தது 50 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கிழக்கு பகுதியிலுள்ள சான்லியுர்ஃபாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தியர்பாகிர், ஓஸ்மானியே ஆகிய பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி இருக்கின்றன.

அதேபோல, சிரியாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய மாகாணங்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. துருக்கியில் 500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்திருக்கிறார். நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா ஆகிய 2 நாடுகளிலும் மொத்தமாக இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it