கான்பூரில் கல்வீச்சு, வன்முறை: தயார் நிலையில் புல்டோசர்கள்!

கான்பூரில் கல்வீச்சு, வன்முறை: தயார் நிலையில் புல்டோசர்கள்!

Share it if you like it

உ.பி. மாநிலம் கான்பூரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீச்சு தாக்குதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி (கியான்வாபி) மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக, ஆய்வு நடத்திய வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், அது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என்று மசூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காசி விஸ்வநாதர் கோயிலில் 350 வருடங்களாக இந்த ஈஸ்வரனுக்காகத்தான் நந்தி காத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் ஹிந்துகள் பதிவு செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். அதேசமயம், சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிவலிங்கத்தை கிண்டல், கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க.வைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, குரானில் குறிப்பிட்டிருக்கும் ஒரு தகவலை சுட்டிக்காட்டி பேசினார். நுபுர் ஷர்மாவின் குறிப்பிட்ட அந்த கருத்தை மட்டும் எடிட் செய்து, ஏ.எல்.டி. என்கிற சேனலில், அதன் இணை இயக்குனர் முமது ஜுபைர் வெளியிட்டு, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விட்டார். இது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மா மீதான தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், நுபுர் ஷர்மாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நுபுர் ஷர்மாவை கொலை செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொலை வழங்கப்படும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தெஹ்ரீக் இ லெப்பை அறிவித்தது. அதேபோல, ஹைதராபாத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (இன்குலாப்) கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான குவாவி அப்பாஸி அறிவித்திருந்தார். இதனிடையே, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக நுபுர் ஷர்மா மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக நுபுர் ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த பரபரப்பான சூழலில், நுபுர் ஷர்மாவை கண்டித்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 3-ம் தேதி கடையடைப்பு போராட்டத்துக்கும், பேரணிக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தது. பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஜாபர் ஹயாத் என்பவன், சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தான். வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்ததும், பரேட் சவுக் மார்கெட்டில் கடைகளை மூடச்சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தகராறில் ஈடுபட்டனர். பலரும் கடைகளை மூட மறுத்ததால், கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார் உட்பட பலரும் காயமடைந்தனர். பின்னர், பெரிய அளவிலான போலீஸ் ஃபோர்ஸ் வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்தி வன்முறையாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, சூஃபி முஸ்லீம்களின் கான்கா அசோசியேஷன் தேசியத் தலைவரான சூஃபி கைசர் ஹசன் மஜிதி, இந்த வன்முறைக்குப் பின்னணியில் பி.எஃப்.ஐ. பயங்கரவாத அமைப்பு இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உ.பி. மாநிலத்தில் இருந்த நாளில் வன்முறையை கட்டவிழ்த்து விட முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கலவரக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ.) கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தேவைப்பட்டால் புல்டோசர்களை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்போதுதான், எதிர்காலத்தில் யாரும் மத கோபத்தை பரப்பி மாநிலத்தில் சூழலைக் கெடுக்க துணிய மாட்டார்கள் என்று தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக 36 பேரை கைது செய்திருக்கும் போலீஸார், 1,500 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.


Share it if you like it