நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம் பெறச் செய்தவர் வாஜ்பாய் – அண்ணாமலை  !

நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம் பெறச் செய்தவர் வாஜ்பாய் – அண்ணாமலை !

Share it if you like it

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது :-

முன்னாள் பாரதப் பிரதமரும், பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது பிறந்த தினம் இன்று. சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய் அவர்கள், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.

பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் நம் தேசத்தின் எதிரிகளைத் தோற்கடித்தவர். நம் நாடு மிகவும் வலுவானது, வளமானது என்பதிலும் பெரும் நம்பிக்கை உடையவர்.
பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

பாரதத்தின் மீது கொண்டுள்ள அன்பால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் அரசால் சமமாக நடத்தப்படுவதையும், அனைவருக்கும் அரசின் சேவைகள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், அமரர் வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
நரேந்திர மோடி அவர்களால், தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டது. அமரர் வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

நாட்டின் முன்னாள் பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 99 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Share it if you like it