ஞானவாபி மசூதி சிவலிங்க வழிபாடு: 21-ம் தேதி வழக்கு விசாரணை!

ஞானவாபி மசூதி சிவலிங்க வழிபாடு: 21-ம் தேதி வழக்கு விசாரணை!

Share it if you like it

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை, வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை, ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கௌரி அம்மன் சிலை உள்ளது. இங்கு தினசரி பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிங்கார கௌரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, அம்மனுக்கு அன்றாடம் பூஜை நடத்த அனுமதி கோரி, டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங், லக்ஷ்மி தேவி, சீதா சாஹு உள்ளிட்ட 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், ஞானவாபி மசூதி ஹந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகவும், உள்ளே ஹிந்து கோயில் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, வழக்கறிஞர்கள் குழு ஒன்றை நியமித்த கோர்ட், மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் மசூதியில் ஆய்வு நடத்தி 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் குழு 3 நாட்கள் ஆய்வு நடத்தியது. இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன. இந்த ஆய்வில்தான், மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. ஆகவே, இந்த சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கறிஞர் விஷ்ணு சங்கரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், “ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு வழக்கமான பூஜை உள்ளிட்டவற்றை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், சிவலிங்கத்தின் பழமையை கார்பன் முறையில் கண்டறியும் ஆய்வுக்கு உட்படுத்த இந்திய அகழாய்வு துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், இந்த மனுவை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, “ஏற்கெனவே ஞானவாபி மசூதியை ஆய்வு செய்வதற்காக, வாரணாசி கீழமை நீதிமன்றம் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது இதற்கு எதிராக, ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் எதிர்வரும் ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினமே இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.


Share it if you like it