தி.மு.க. தலைவர் மகனின் காதல் ‘லீலை’: பெண்ணின் தாய் தீக்குளிக்க முயற்சி!

தி.மு.க. தலைவர் மகனின் காதல் ‘லீலை’: பெண்ணின் தாய் தீக்குளிக்க முயற்சி!

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகனின் காதல் லீலையால் பெண்ணின் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வானை. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் ராஜாவுக்கு 18 வயது ஆகிறது. மகளுக்கு 16 வயது ஆகிறது. அதேபகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவர் அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவரது மகன் சுலைமான். இவர், தெய்வானையின் மகளை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். பின்னர், அச்சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து காதல் லீலையை அரங்கேற்றி இருக்கிறார். மேலும், அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விஷயம் எப்படியோ தெய்வானைக்குத் தெரிந்து விட்டது. உடனே, மகளிடம் இருந்த செல்போனை பறித்து சுலைமானிடம் கொடுக்கச் சென்றிருக்கிறார்கள் தெய்வானையும், அவரது மகனும். அப்போது, சுலைமான், செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சேர்ந்து தெய்வானையையும், ராஜாவையும் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களை தாக்கியவர்கள் மீதும், தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சுலைமான் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்கள் தெய்வானையும், ராஜாவும்.

அப்போது, திடீரென தெய்வானை மற்றும் அவரது மகன் ராஜா ஆகிய இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதைப் பார்த்த அங்கிருந்த பெண் போலீஸார், விரைந்து சென்று இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள். எனினும், இந்த அதிர்ச்சியில் தெய்வானைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தெய்வானையை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறார் தி.மு.க. ஊராட்சி தலைவரின் மகன். இதை தட்டிக்கேட்டு நீதி கேட்டுச் சென்ற அச்சிறுமியின் தாய், மகனை தி.மு.க. தலைவரும் அவரது உறவினர்களும் தாக்கி இருக்கிறார்கள். இவர்களை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றிருக்கிறார் அச்சிறுமியின் தாய்.

தமிழகத்தில் தினந்தோறும் தி.மு.க.வினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீக்குளித்தால்தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பா.ஜ.க. தயங்காது” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it