சென்னை கொடுங்கையூர் பகுதியில் சென்னை பிலால் தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டல் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வியாசர்பாடியை சேர்ந்த ராம்ஜி என்பவர் தனது மனைவி மற்றும் தனது மகளுடன் அந்த உணவகத்திற்கு சென்று பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதேபோல் கொடுங்கையூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனது மனைவிக்காக பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கனை பார்சல் செய்து வீட்டில் சாப்பிட்டுள்ளார். இந்தநிலையில் உணவை சாப்பிட்ட நான்கு வாடிக்கையாளர்களுக்கும் சில மணி நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணவக உரிமையாளரிடம் கேட்டபொழுது அவர்கள் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று மிகவும் திமிராக கூறியுள்ளனர். இதனையடுத்து கொடுங்கையூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.