கார் பந்தயத்துக்காக இத்தனை கோடியா ? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

கார் பந்தயத்துக்காக இத்தனை கோடியா ? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

Share it if you like it

சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. சென்னை பெருநகர வளரர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்திற்கு பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளபோதும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையிலும் நகரின் மத்தியில் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

மரங்களும் வெட்டப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, இதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில், ஒரு மரம் கூட வெட்டவில்லை, அவ்வாறு வெட்டியதாக புகார் வந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், துறைமுகம் மற்றும் கடலோர காவல்படை அலுவலகங்கள் அருகில் இல்லை என்றும், ராணுவ அலுவலகங்களுக்கு செல்ல இடையூறு இல்லாத வழி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பந்தய தடத்திற்கான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன என்றும், பந்தய வழித்தடத்தின் அருகே குடியிருப்பு ஏதும் இல்லை என்றும், பந்தய நாட்களில் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த போவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, கார் பந்தயம் நடத்தவிருக்கும் தனியார் நிறுவனம் பந்தயம் நடத்தப்படக்கூடிய இடத்தில் தடுப்பான்கள், கட்டமைப்பு வசதிகளுக்காக சுமார் 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்காக, தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும், இதன்மூலம் தமிழக அரசுக்கு ஏதாவது வருவாய் கிடைக்கிறதா ? என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it