இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும்.- டி.டி.வி.தினகரன் !

இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும்.- டி.டி.வி.தினகரன் !

Share it if you like it

இஸ்லாமியர்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மேலும், “தமிழகத்தில் வெற்றி பெற்றுதான் பிரதமராக வேண்டிய அவசியமில்லை” என்று மோடியின் செல்வாக்கு குறித்து அவர் குறிப்பிட்டார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 19) கூறியது:

திமுக கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லொனா துயரத்தில் உள்ளனர். போதை கலாச்சாரம் புழக்கம் மூலை முடுக்கெல்லாம் பரவி மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு கூட பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

ஆளுங்கட்சி துணையுடன் போதை கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளதாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி வருத்தத்துடன் பேசியுள்ளார். அரசியலுக்காக அவர் பேசவில்லை. தமிழகத்தில் வெற்றி பெற்றுதான் பிரதமராக வேண்டிய அவசியமில்லை. பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். 360 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பாஜக அடைந்துவிடும். ஊழல் இல்லாத ஆட்சி, வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நிர்வாகம், இந்தியாவின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 10 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளனர். இதனால் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

மக்களின் மனநிலையை உணர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை கொடுத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை தாங்கள் கொடுத்ததாக திமுக கூறுகிறது. தமிழகத்துக்கு 10 ஆண்டுகளாக, பாஜக அரசு கொடுத்த திட்டங்களை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் என்பதற்காக அருமையான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது.

தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் வீழ்த்தி பிரதமர் மோடிக்கு கவுரவமான எண்ணிக்கையில் உறுப்பினர்களை தமிழக மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அணிலை போல அமமுக செயலாற்றும். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளை பெற்றதாக, அப்போதுள்ள யதார்த்தத்தை கூறினேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் பாஜக என்ற திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றி பெறும். தொண்டர்களின் விருப்பப்படியே அமமுக கூட்டணி அமைத்துள்ளது.

யாருடைய குடியுரிமையும் பறிக்க, குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிப்பதுதான் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் நோக்கம். பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை விரட்டவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தவறு என கூறவில்லை. இஸ்லாமிய மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெறுவதற்காக திமுக வழக்கம்போல் பயமுறுத்தி வருகிறது” என்றார் தினகரன். முன்னதாக அவர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *