என்ன கற்றுக் கொண்டோம்?… என்ன கற்றுக் கொடுக்கிறோம்?- எழுத்தாளர் ஜெயகாந்தன்!

என்ன கற்றுக் கொண்டோம்?… என்ன கற்றுக் கொடுக்கிறோம்?- எழுத்தாளர் ஜெயகாந்தன்!

Share it if you like it

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை…

 

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.

ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும் போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள்.

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய்ப் படுத்துக் கிடக்கிறான்.

ரயில் வருகிற நேரம்…

ஒரு ‘குஷ்டரோகி’ பிச்சைக்காரன், அந்த இளைஞனைப் பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், “நான் ஒரு குஷ்டரோகி… எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா… இப்படித் தான் அன்னைக்குக் கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்…

அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க… அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படிப்பட்ட நானே உயிரோட இருக்கும் போது… உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?…’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

அந்த இளைஞன் தான் செத்துப் போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

“அம்மா… நான் இருக்கிறேன் அம்மா…” என அந்த இளைஞன் கத்திக் கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக் கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்… நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே…” என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்…

செத்துப் போன குஷ்டரோகியைப் பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,

“அம்மா…! அவன் எனக்கு வாழக் கத்துக் கொடுத்தான்… நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்…!” எனக் கதறி அழுகிறான்.

ஆகவே நாம்,

நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!


Share it if you like it