பாரம்பரிய உடையில் பொங்கலோ பொங்கல்-அசத்திய வெளிநாட்டினர்!

பாரம்பரிய உடையில் பொங்கலோ பொங்கல்-அசத்திய வெளிநாட்டினர்!

Share it if you like it

சென்னையில் உள்ள `கிளாசிக் ரன்’ என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டினர் பங்குபெறும் `ஆட்டோ சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு கடந்த 12 வருடமாக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டும், ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில், இத்தாலி, நியூசிலாந்து, ஹங்கேரி, சீனா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கலந்துகொண்டு ஆட்டோக்களில் 6 அணியாகப் பிரிந்து 6 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய அன்னை பேராலயம், முத்துநகர் கடற்கரை, உப்பளங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வந்தனர். தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு பன்னீர் தெளித்து, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின் அனைவரும் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி, சேலை அணிந்தனர். 6 அணிகளுக்கும் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வோர் அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு குலவைச் சத்தமும் எழுப்பி அசத்தினர்.
இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி “வெளிநாட்டினர் நமது தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும் தெரிந்துகொள்வதற்காக இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

“தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும்போது தனி மரியாதை கிடைக்கிறது. இந்த உடை வித்தியாசமாகவும், எளிமையாகவும் உள்ளது.
இங்கு கிராம மக்களுடன் இணைந்து ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று” என கூறினர்.


Share it if you like it