இனி மொழி அரசியல் செய்ய முடியாது என்கிற அச்சமா? ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!

இனி மொழி அரசியல் செய்ய முடியாது என்கிற அச்சமா? ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!

Share it if you like it

இனி நம் தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஸ்டாலின் எதிர்ப்பதேன்? ஓ! இனி மொழி அரசியல் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடியாது என்ற அச்சமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கி இருக்கிறது. இக்குழுவின் பரிந்துரைகளை வன்மையாக கண்டித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். எதற்காக அவர் கண்டித்திருக்கிறார்? ஏன் கண்டனம்? என்பது குறித்து தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுகுறித்த அவரது விளக்கம்: “ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் ஹிந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது தவறானது. ஏடுகள் சுட்டிக் காட்டுவதை கொண்டு முதல்வர் அறிக்கையாக வெளியிட்டிருப்பது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட. மேற்கண்ட கல்வி நிலையங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது.

அதேபோல, இந்தியா முழுமைக்கும் ஹிந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரை இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது போன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதலமைச்சர் வெளியிடுவது முறையல்ல. மேலும், மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்விலிருந்து ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையை முன்வைத்திருப்பது ஏன் என்று கேட்கிறார்? இல்லை. ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே தேர்விலிருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தில் இனி ஆங்கிலத்திற்கு பதில் தமிழ் இடம் பெறும். இதை ஏன் தமிழக முதல்வர் எதிர்க்கிறார்?

நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை கட்டாயமாக்க முயல்வது, ஹிந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளை பேசுவோர் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்த வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேரெதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, ஹிந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என்கிறார் ஸ்டாலின். இதற்கு நமது பதில் என்னவென்றால், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வருவது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றா? ஹிந்தி பேசும் மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

அதாவது தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயம் என பரிந்துரை செய்திருப்பது குற்றமா? அனைத்து மொழிகளையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்ற பார்வையுடனே இந்த பரிந்துரைகள் உள்ளபோது, அதை எதிர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் தி.மு.க. எதிர்க்கிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். அதேபோல், ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நீதிமன்ற தீர்ப்புகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும் என்றும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது நம் நீண்ட நாள் கோரிக்கைதானே? மத்திய அரசு, மாநில அரசோடு இதுநாள் வரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி நம் தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஸ்டாலின் எதிர்ப்பதேன்?

இதைத்தானே இவ்வளவு நாட்களாக கேட்டு கொண்டிருந்தோம்? இதற்குத்தானே பல்வேறு போராட்டங்கள்? இதற்குத்தானே நாம் போராடினோம்? இப்போது நிறைவேறப்போகிற வேளையில் ஏன் எதிர்க்கிறீர்கள்? ஓ! இனி மொழி அரசியல் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்ய முடியாது என்ற அச்சமா? இது முறையா? தமிழுக்கு நீங்கள் செய்யும் துரோகம் அல்லவா முதல்வர் ஸ்டாலின்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it