வீடு தோறும் பட்டொளி வீசி பறக்கட்டும்…

வீடு தோறும் பட்டொளி வீசி பறக்கட்டும்…

Share it if you like it

வீடு தோறும் பட்டொளி வீசி பறக்கட்டும்

ஒவ்வொரு நாட்டுக்கும் என தனித்தனியாக ஓரு கொடி இருக்கும். அந்தக் கொடியே, அந்த நாட்டைப் பற்றி எங்கு குறிப்பிடப் பட்டாலும், அந்த நாட்டின் சார்பாக இடம் பெற்று இருக்கும். எந்த ஓரு நாட்டினருக்கும், அவர்களுடைய தேசியக் கொடியைப் பார்த்த உடனேயே, தேசபக்தி மனதில் எழும், தேசிய உணர்வைத் தூண்டும்.

நமது நாட்டில் தேசியக் கொடி கடந்து வந்த பாதைகள் :

நமது நாட்டிற்கான தேசியக் கொடி, சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையால், 1904 ஆம் ஆண்டு வடிவமைப்பு செய்யப் பட்டது. அந்தக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன், பகவான் இந்திரனின் வஜ்ராயுதமும், வங்காளம் மொழியில் “வந்தே மாதரம்” என்னும் வாசகமும் இடம் பெற்று இருந்தன.

பின்னர், 1907 ஆம் ஆண்டில், மேடம் பிகாஜி காமா, விநாயக் தாமோதர் சாவர்க்கர் என அழைக்கப் படும் வீர சாவர்க்கர் மற்றும் சியாம்ஜி கிருஷ்ண வர்மா இணைந்து ஓர் மூவர்ணக் கொடியை வடிவமைத்தனர். அந்தக் கொடியானது, 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி, ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கிரட்டில்  (Stuttgrat) ஏற்றப் பட்டது. “வெளிநாட்டில் ஏற்றப் பட்ட முதல் இந்திய தேசியக் கொடி” என்னும் சிறப்பையும், அது பெற்றது.

“ஹோம் ரூல்” (Home Rule Movement) இயக்கத்தின் போது, 1917 ஆம் ஆண்டில், பால கங்காதர திலகர் ஓரு புதிய கொடியை ஏற்றுக் கொண்டார். அது சிகப்பு, பச்சை நிறத்தில், நிலவு மற்றும் நட்சத்திரத்துடன் இடம் பெற்று இருந்தன.

பிங்கிலி வெங்கையா ஓரு கொடியை வடிவமைத்தார். அதில் மூவர்ண நிறத்துடன் சர்கா (கை ராட்டை) சின்னம், இடம் பெற்று இருந்தன.

அந்தக் கொடியே, நமது நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைந்த குழுவின் பரிந்துரையின் பேரில், கை ராட்டை சின்னத்திற்கு பதிலாக, அசோகரின் சக்ரா (சக்கரம்) சின்னத்துடன் மாறியது. “மூவர்ண நிறத்துடன் அசோகரின் சக்கரம்” இடம் பெற்றக் கொடியே, நமது நாட்டின் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

https://www.indiatoday.in/fyi/story/evolution-indian-flag-independence-day-15th-august-288436-2015-08-15

https://www.mapsofindia.com/maps/india/national-flag.htm

நமது நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள் :

15 ஆகஸ்ட், சுதந்திர தினம் அன்று தேசியக் கொடி ஏற்றும் போது, கம்பத்தின் கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து, கட்டப்பட்டு உள்ள தேசியக் கொடி திறக்கப்பட்டு, பறக்க விடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வு, “கொடி ஏற்றம்” (Flag hoisting) என அழைக்கப் படும்.

26 ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று, கம்பத்தின் உச்சியிலே தேசியக் கொடி கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு, அதாவது கொடி  திறக்கப் பட்டு, பறக்க விடப்படும். “கொடியை பறக்க விடுதல்” (Flag Unfurling) என இதனை அழைப்பர்.

சுதந்திரம் கிடைத்த போது, “இந்திய நாட்டின் அரசியல் சட்டம்” (Constitution of India) அமலுக்கு வரவில்லை. அப்போது, இந்திய பிரதமர் தான், நாட்டின் முதல் மனிதராக (Political head) கருதப் பட்டார். குடியரசுத் தலைவராக யாரும் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசுத் தலைவர் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.

குடியரசு தினத்தன்று “இந்திய நாட்டின் அரசியல் சட்டம்” அமலுக்கு வந்த காரணத்தால், “அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர்” என்ற முறையில், குடியரசுத் தலைவர் (President of India), இந்திய நாட்டின் தேசியக் கொடியை பறக்க விடுவார்.

சுதந்திர தினம் அன்று, டில்லி செங்கோட்டையில் (Redfort), கொடி ஏற்றப் படும். குடியரசு தினம் அன்று, டில்லி ராஜ்பாத்தில் கொடி பறக்க விடப் படும்.

https://www.news18.com/news/education-career/how-are-26-january-and-15-august-flag-hoisting-different-know-three-key-rules-5722915.html

வீடு தோறும் மூவர்ணக் கொடி  :

நமது நாடு விடுதலை அடைந்து, 75 ஆம் ஆண்டினை நாம் அனைவரும் கொண்டாடி வரும் இந்த வருடத்தில், ” ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி”யை ஏற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், மத்திய அரசு “ஹர் கர் திரங்கா” என்ற “வீடு தோறும் மூவர்ணக் கொடி” (Har Ghar Tiranga) என்னும் ஓர் திட்டத்தை தொடங்கியது.

அதன் படி, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை, நமது அனைவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றன. அதற்காகவே, அனைத்து தபால் அலுவலகத்திலும் (Post Office), மிகக் குறைந்த விலையில் தேசியக் கொடி விற்கப் பட்டு வருகிறது. இதற்கெனவே, தேசியக் கொடி ஏற்றும் நடைமுறையில், மத்திய அரசு சில மாறுதல்களை செய்து உள்ளன.

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா :

2021 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி தொடங்கி, 2023 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை என, தொடர்ந்து 75 வாரங்களுக்கு  “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்” (Azadi Ka Amrit Mahotsav) என்ற “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” மூலமாக, பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை, மத்திய அரசு நடத்தி வருகின்றன.

https://amritmahotsav.nic.in/about.htm

நமது நாட்டின் விடுதலைக்காக, பல பேர் தங்களுடைய சொந்த நலனை விட்டுக் கொடுத்து, மக்கள் நலன் மேல் அக்கறைக் கொண்டு, நாட்டின் நலன் கருதி, சுதந்திரத்திற்காக தங்களது உடல், பொருள் என அனைத்தையும் அளித்தனர். பலரும், தங்களது குடும்பம் வறுமையான நிலையில் இருந்த போதும், தேசத்தின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய பெயர்களை நினைவில் கொண்டு, அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து கௌரவப் படுத்துவோம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், நாம் அனைவரும் நமது வீட்டில், நமது நாட்டின் தேசியக் கொடியை, மத்திய அரசு வழங்கிய அறிவுறுத்தலின் படி, ஏற்றி மகிழ்வோம். மதம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து “நாம் அனைவரும் இந்தியர்” என்ற பெருமித உணர்வுடன், நமது நாட்டின் எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடுவோம், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே…

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று…

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it