பிறந்த நாளுக்கு பேனர்… மின்சாரம் தாக்கி ரசிகர்கள் 2 பேர் பலி… என்ன செய்யப் போகிறார் நடிகர் சூர்யா!

பிறந்த நாளுக்கு பேனர்… மின்சாரம் தாக்கி ரசிகர்கள் 2 பேர் பலி… என்ன செய்யப் போகிறார் நடிகர் சூர்யா!

Share it if you like it

ஆந்திராவில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பேனர் கட்டிய ரசிகர்கள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர், இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திரை பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் ரத்ததானம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இந்த சூழலில்தான், ஆந்திராவில் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பேனர் கட்ட முயன்ற ரசிகர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் மோபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அதேபோல, பாபட்லா மாவட்டம் கே.பங்களூரைச் சேர்ந்தவர் போளூரி சாய். இருவரும் தீவிர சூர்யா ரசிகர்கள். எனவே, சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, நேற்று இரவு ஃப்ளெக்ஸ் பேனர்  கட்டி இருக்கிறார்கள். அப்போது பேனரில் இருந்த இரும்புக் கம்பி, அருகிலிருந்த மின்சார கம்பியில் மோதியது. இதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், உயிரிழந்த இருவரும் மாணவர்கள் என்பதும், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து நரசராவ்பேட்டை ரூரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ரசிகர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it