தென்னகத்தின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள்

தென்னகத்தின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள்

Share it if you like it

தென்னகத்தின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள்

“பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பாராட்டியவர் மஹாகவி சுபபரமணிய பாரதியார், (1914)

இதே பெண்மணி பின்னாளில் காந்தி அடிகளால் ‘ தென்னிந்தியாவின் ராணி ஜான்சி ‘ என்று பாராட்டப்பட்டார்.

இப்படி, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களால் மதிக்கப்பட்ட. இந்த அஞ்சலை அம்மாள் யார் என்று தெரிந்து கொள்வோமா?

1890ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அஞ்சலை அம்மாள் கிராமப் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு வரையே படித்தார். ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அஞ்சலை அம்மாள் கிராமப் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு வரையே படித்தார். 1908 ல், அதே மாவட்டத்தைச் சேர்ந்த முருகப்பாவுடன் மணம் நடந்தேறுகிறது. தம்பதியினர் இருவருக்கும் விடுதலைப் போரில் நாட்டம் ஏற்பட்டது. காந்திஜியின் தலைமையின் மீது ஈர்ப்பும் உண்டாயிற்று.

1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டனர், பின்னர் 1927ம் ஆண்டு விடுதலை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. 1857 முதல் சுதந்திரப் போரில் தீவிரமாக பங்கு கொண்ட வீரர்களை கொடூரமாகக் கொன்று மரங்களில் தொங்க விட்டு, போரிட நினைக்கும் மற்றவர்களுக்கு எச்சரிக்கை என்று கொக்கரித்தவன், கர்னல் நீல். அவன் விதைத்த வினைக்கு சில மாதங்களில் லட்சமணபுரி மாளிகை முற்றுகையில் விளைச்சலைக் கண்டான் (கொல்லப்பட்டான்), 1860 ம் ஆண்டு அவனுக்கு சென்னையில் இன்றைய அண்ணா சாலையில் ஸ்பென்சர் வளாகத்தின் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. அகற்ற வேண்டும் என்று சென்னை மகாஜன சபையும் இந்திய தேசிய காங்கிரசும் 1927ல் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தின. அதில் பங்கு கொண்டனர் அஞ்சலை அம்மாளும் அவர் கணவரும் மட்டுமல்ல அவர்களுடைய 9 வயதுப் பெண்ணான அம்மாக்கண்ணுவும். சிலையைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றனர். (மகள் 4 1/2 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டாள்). தமிழகத்தில் சுதந்திர போரில் தீவிரமாக ஈடுபட்டு முதன் முதலில் சிறை சென்ற பெண்மணிகளின் இவருக்கும் மதுரை பத்மாசினி அம்மாள் தனி இடம் உண்டு,.

அந்த காலகட்டத்தில் தமிழகச் சுற்றுப்பயணத்தின் போது முருகப்பா-அஞ்சலை அம்மாள் பற்றிக் கேள்விப்பட்டு காந்திஜி இவர்களைக் கடலூரில் சிறையில் சென்று சந்தித்தார். மகள் அம்மாக்கண்ணையம் பாராட்டி, அவள் விடுதலை ஆன பின்னர் அவளுக்கு லீலாவதி என்று பெயர் சூட்டி வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வளர்த்தார்.

கடலூரில் அஞ்சலை அம்மாள் 1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 6 மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நிறை மாதத்தில், பரோலில் வந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின் 15 நாள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாத தண்டனையை அனுபவித்தார். சிறையில் இருந்து பரோலில் வந்தது குழந்தை பிறந்ததால் ‘செயில் வீரன்’ என்று பெயர் சூட்டினார். பின்னர் அவர் ‘ஜெயவீரன்’ என்று அழைக்கப்பட்டார்.

1931 ஆம் ஆண்டு சென்னையில் அகில பாரத மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார்.

1932-இல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியலை நடத்தினார், இதனால் ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

1933 சட்டமறுப்பு மறியலிலும் அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.

1940 தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றுக் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் (1941-42) பங்கேற்று சென்னை உட்படப் பல நகரங்களுக்கும் சென்று உரையாற்றியமைக்காகச் சிறை சென்றார். இப்படியாக, இவர் ஆக மொத்தம் 4 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவருடைய மனஉறுதி வளர்ந்ததே தவிர சிறிதும் குன்ற வில்லை.

அதற்கு, ஒரு சிறந்த உதாரணமாக, அவர் ஆற்றிய சாகசத்தைக் காணலாம்.1934-இல் காந்தி, கடலூருக்கு வந்தபோது அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார்.அன்னிய அரசு காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையின் துணிவைச் சுட்டி அப்பொழுது தான் காந்தியடிகள் இவரை “தென்னிந்தியாவின் ஜான்சிராணி” என்று அழைத்தார்.

1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார்.

1937, 1946, 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எளிய, தூய, தியாகமயமான அஞ்சலை அம்மாளின் வாழ்வு 1961ல் பிப்ரவரி மாதம் 20ம் தேதி நிறைவுற்றது, இந்த புனித நன்னாளில் அவர் நினைவைப் போற்றி தேசியப் பணியில் ஊக்கத்துடன் செயல்பட உறுதி ஏற்போம்.


Share it if you like it