அண்ணாமலை மாஸ்… தி.மு.க. பீஸ்… ஆனாலும் ஸ்டிக்கர் ஒட்ட தவறவில்லை!

அண்ணாமலை மாஸ்… தி.மு.க. பீஸ்… ஆனாலும் ஸ்டிக்கர் ஒட்ட தவறவில்லை!

Share it if you like it

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வேண்டுகோளை ஏற்று அத்திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க.வினரோ இது அக்கட்சியின் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, ஏதோ மாநிலத்தின் திட்டம் போல காட்டிக் கொள்வது தி.மு.க. அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் புதிதாக ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார்கள். அதாவது, காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளான சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இது டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, அத்துறையின் அமைச்சர் பிரகலாத் ஜோஷியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 6-ம் தேதி வெளியிட்ட பதிவில், “தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்னை பெங்களூருவில் அவசர அவசரமாக சந்தித்தார். காவிரி டெல்டாவின் 3 சுரங்கங்களுக்கான ஏலத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார். ஆகவே, கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் காக்கவும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து மேற்குறிப்பிட்ட 3 சுரங்கங்களை நீக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன்” என்று பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார். மேலும், இந்த ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பா.ஜ.க. சார்பாக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியிருந்தார். ஆனால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தாலும், மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தாலுமே சாத்தியமானது என்று தி.மு.க.வினர் கூறிவருகின்றனர். இதையடுத்து, தனது பதிவில் அண்ணாமலையை அமைச்சர் சுட்டிக்காட்டி இருப்பதையும், முதல்வர் ஸ்டாலினை டேக் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டி, தி.மு.க. வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டுவதாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.


Share it if you like it