ஏப்ரல் 13-ம் தேதி வேதாரண்ய உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய தினம்

ஏப்ரல் 13-ம் தேதி வேதாரண்ய உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய தினம்

Share it if you like it

ஏப்ரல் 13-ம் தேதி  வேதாரண்ய உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய தினம்

வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில், இந்தியர்கள் மீது விதித்த, உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய ‘உப்பு சத்தியாகிரகம்’ போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில் “கடலில் உப்பு அள்ளும் போராட்டம்” நடத்த, தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்தது.

1930-ம் ஆண்டு, தண்டி யாத்திரை முடிந்து, சரியாக ஒரு வாரத்தில், ஏப்ரல் 13-ந்தேதி, திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு யாத்திரை, ராஜாஜி தலைமையில் தொடங்கியது. காந்தி நடத்திய தண்டி யாத்திரையில், போலீஸ் குறுக்கீடு அதிகம் இல்லை. ஆனால், வேதாரண்யம் உப்பு யாத்திரையோ, கடும் அடக்குமுறைகளை சந்தித்தது.

யாத்திரையில் கலந்து கொள்வோருக்கு, வழியில் யாரும் தங்க இடமோ, உணவோ கொடுக்கக் கூடாது. மீறினால், அவர்களுக்கு அபராதமும், ஜெயிலும் கிடைக்கும் என்று, ஊர் ஊராக அரசு தரப்பில், தண்டோரா போடப் பட்டது.

யாத்திரை சென்றவர்களை போலீசார் தாக்கியதில், போராளிகளின் உடலில், வரி வரியாக ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவர்கள் மன உறுதியுடன், யாத்திரையை தொடர்ந்தனர்.

யாத்திரையில், ராஜாஜியும் அவர்களுடன் கால்நடையாக சென்றார். அவரின் வலது காலில், கல் இடித்து ரத்தக் காயம் ஏற்பட்டது. கட்டுப் போட்டு நடந்தார். யாத்திரையில் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை, இடை இடையே நடந்து உற்சாகப் படுத்தினார்.

திருச்சியில் தொடங்கி ஸ்ரீரங்கம், திருவளர் சோலை, கல்லணை, கோவிலடி, திருக்காட்டுப் பள்ளி, சாத்தனூர், திருவையாறு, கண்டியூர், தஞ்சாவூர், அய்யம் பேட்டை, பாபநாசம், கும்பகோணம், வலங்கை மான், ஆலங்குடி, நீடாமங்கலம், பூவானூர், ராஜப்பையன் சாவடி, மன்னார்குடி, ஆதிச்சபுரம், திருத்துறைப் பூண்டி, தகட்டூர், ஆயக்காரன் புலம் வழியே யாத்திரை வேதாரண்யத்தை 16 நாட்களில் அடைந்தது.

தொடக்கத்தில் யாத்திரையில் செல்பவர்களுக்கு, உணவு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த வழியாக 42-ம் நம்பர், 11-ம் நம்பர் என்று ஒருவர் சொல்லிக் கொண்டு போவார். அவர் சொன்ன நம்பர், பட்டையாக இலக்கமிடப் பட்ட ஆலமரம், புளியமரங்களில் மூட்டைகள் தொங்கிக் கொண்டு இருந்தன.

அந்த மூட்டைகளில் தயிர் சாதம், புளி சாதம் கட்டப் பட்டிருந்தன. யாத்திரை சென்றவர்கள், அதை அவிழ்த்து சாப்பிட்டார்கள். போலீஸ்காரர்களுக்கு உணவு மூட்டைகளை கட்டியது யார்? என தெரியாது என்பதால், அவர்களை கைது செய்ய முடியாமல் தடுமாறினர். கோவிலடி தொடங்கி யாத்திரை செல்லும் வழியெங்கும், இத்தகு விருந்தோம்பல் நடந்தது.

மேலும், வழியில் போலீஸ் எதிர்ப்பையும் மீறி, வாசலில் ஆங்காங்கே நீர் தெளித்து, கோலம் போடப் பட்டிருந்தது. சந்தனம், பூக்கள், கற்கண்டு, பானகம், பாசிப் பயறு பாயாசம் என உபசரிப்புகளும் நடந்தன. பண முடிப்புகள் வழங்கப் பட்டன.

யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு, சில நூதன கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டன. புகை பிடிக்கக் கூடாது. காபி, டீ அருந்த வெளியில் போகக் கூடாது. இயற்கை உபாதைகளுக்கு கிராமங்களை அசுத்தப்படுத்தக் கூடாது. சிறு பள்ளம் தோண்டி, அதில் காலைக் கடன் கழிக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப் பட்டன.

யாத்திரை சென்றவர்கள், வழியில் தங்க இடமின்றி செய்வதற்காக, வழியில் உள்ள சத்திரம் சாவடிகளையும் போலீஸ் பூட்டியது. ஆற்று மணலிலும், மாந்தோப்பிலும், கோவில்களிலும் யாத்திரை செல்வோர் தங்கினர். எல்லா இடங்களிலும் மது விலக்கு, கதர் பிரசாரங்கள் நடந்தன. சித்திரப் படங்கள் மூலம் மது எதிர்ப்பு செய்யப் பட்டது. பீடி குடித்ததற்காக, சிலர் நீக்கப் பட்டனர். அந்நிய நாட்டு துணிகள், மலையாக குவிக்கப் பட்டு எரிக்கப் பட்டன.

போராட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லாதவர்கள், வீட்டிற்கு போகலாம் என ராஜாஜி கூறினார். ஆனாலும், யாரும் பின் வாங்கவில்லை. 30-4-1930 அன்று, ராஜாஜி கைது செய்யப் பட்டார். எனினும், சத்தியாகிரகம் தொடர்ந்து நீடிக்க, வலுவான ஆயத்தங்கள் செய்திருந்தார். கே.சந்தானம், வெங்கட்ராமையர், கே.சுப்ரமணியம், ஜி.ராமசந்திரன் உள்ளிட்டோர், ராஜாஜிக்கு பிறகு தொடர்ந்து தலைமை தாங்கினர். வரிசையாக கைதும் செய்யப் பட்டனர். சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் இடத்தில் தான் தங்கினர்.

தண்டியில் காந்தியடிகள் உப்பு அள்ளியதைப் போல, வேதாரண்யத்தில் அனுமதியில்லை. இது தண்டிக்கப்பட்ட இடமாக மாறியது. ராஜாஜியே ரகசியமாக அகஸ்தியம் பள்ளியில் தான், உப்பு அள்ளினார். தொடர்ந்தும் சத்தியாகிரகிகள் போலீசுக்கு தெரியாமல், ரகசியமாகத் தான் உப்பு எடுத்தனர்.

அவற்றை சத்தியாகிரகிகள், தாம் தங்கிய கொட்டகையில், மலை போல் குவித்தனர். போலீஸ் அதனைப் பறிக்க முடியாமல், வட்டம் வட்டமாக கை கோர்த்து நின்றனர். அவர்களை பிரிப்பதற்காக, மிருகத் தனமாக தாக்கினர். அவர்களை, கள்ளிச் செடிகள் நிறைந்த புதரில், தூக்கி எறிந்தனர். 29-5-1930 அன்று, சத்தியாகிரகிகள் அனைவரும் கைதாகும் வரை, போராட்டம் நடந்தது.

இறுதியில் ஆங்கிலேய ஆட்சியின் போலீசாரால், உப்பு குவியல் அகற்றப் பட்டது. கொட்டகையும் பிரித்து வீசப் பட்டது. எனினும், மக்களின் பேராதரவு, போராட்டத்திற்கு கிடைத்தது. பெண்கள் ஆலயங்களில் திரண்டும், ஆங்கிலேயர் ஆட்சியை சபித்தனர். துணி வெளுப்பவர்கள், முகம் மழிப்பவர்கள் என அத்தனை பிரிவு சமூகமும், ஆங்கிலேயர்களை வெறுத்து ஒதுக்கியது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில், “வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக யாத்திரை” ஒரு மைல் கல் என்றால், அது மிகையல்ல.

  • ராதா சௌந்தரி

Share it if you like it

One thought on “ஏப்ரல் 13-ம் தேதி வேதாரண்ய உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய தினம்

Comments are closed.