ஆங்கிலேயரை கலங்கடித்த ஆர்யா (எ) பாஷ்யம்

ஆங்கிலேயரை கலங்கடித்த ஆர்யா (எ) பாஷ்யம்

Share it if you like it

1932 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25 ஆம் நாள், “ஆர்யா என்கிற பாஷ்யம்” திருவல்லிக்கேணி கடைத் தெருவில், துணிக் கடைகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்… அவர் கேட்டது… “இங்கே இந்திய தேசியக்கொடி இருக்கிறதா?”

பலர் “இல்லை” என்று சொல்லி விட்டார்கள்… சிலர்  ரகசியமாய் விற்பனைக்கு வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள்….

பாஷ்யத்தின் தேவை, அந்த சிறிய கொடி அல்ல… அவர் கற்பனையில் இருந்த கொடியின் அளவில் காலே அரைக்கால் அளவு கூட இல்லை, அவர்கள் காட்டிய கொடி… அவர் தேவை பெரிய அளவு… மிகப்பெரிய அளவு…. யோசித்தார்….

ஒரு பெரிய நான்கு முழ வேட்டியை வாங்கினார்… வண்ணப் பொடிக் கடையில் காவியும், பச்சையும், நீலமும் வாங்கிக் கொண்டார்…. தம்பு செட்டி தெருவில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்தார்…. வாங்கி வந்த வேட்டியில், ஒரு பக்கம் காவியையும், ஒருபக்கம் பச்சையும் கரைத்து நனைத்து நடுவே நீல ராட்டை வரைந்து ஒரு இந்திய தேசியக் கொடியை உருவாக்கினார்…. அதில்…”இந்தியா இன்று முதல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது..” என்று எழுதினார்….அதை காய வைத்து மடித்து, இடுப்பில் சுற்றிக் கொண்டார்… மேலே காக்கி அரை டவுசரும், காக்கி சட்டையும் அணிந்து கொண்டார்..

மீண்டும் திருவல்லிக்கேணி வந்தார்…. சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபால் சந்தித்தார்… “நான் எங்கு போனாலும், என் பின்னே தூரமாக தொடர்ந்து வா” என கட்டளையிட்டார்…

இருவருமாக மவுண்ட் ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச் சீட்டு வாங்கி, நுழைந்தார்கள்.. இரவு 12 மணி.. படம் முடிந்து அனைவரும் வெளியேற…. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணி முடிந்து பொழுது போக்க சினிமா பார்க்க வந்து வெளியேறியவர்களுடன் கலந்தார்… அதற்காகத் தான் அந்த காக்கி சீருடை தயார் நிலை…

காக்கி சீருடையில் கூட்டத்தில் கலந்து நுழைந்ததால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், யாரும் கண்டு கொண்டு தடுக்கவில்லை…

காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருக்க… இவர்  மட்டும் ரகசியமாய் பிரிந்து, கோட்டையின் கொடி மரம் நோக்கி நடந்தார்… 200 அடி உயர கொடி மரத்தில், 140 அடி ஏறி…. அந்த அளவு வரை தான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது.. அதற்கும் மேலே 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்பு தான்…. மனதில் எரிந்த சுதந்திர வேட்கை , அந்த இரும்புக் குழாயை இறுகப் பற்றும் உறுதியை தந்தது…

அடி அடியாய் ஏறி, 60 அடியையும் கடந்து, உச்சியை அடைந்து… ஒரு உடும்பை போல தன்னை குழாய்களில் பிணைத்து, இறுக்கிக் கொண்டு, தன் இடுப்பில் இருந்த இந்திய தேசியக் கொடியை உதறி, அந்த கம்பத்தில் கட்டினார்…

சறுக்கியபடி கீழிறங்கி நழுவி, மீண்டும் தம்புச் செட்டித் தெருவை அடைந்தார்… மறுநாள் காலை, ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக் கொண்டது…  எல்லா உயரதிகாரிகளும் கோட்டை கொடி மரத்தின் அருகே குழுமினார்கள்…

“யார்.. யார்…. “

கேள்விகள் அவர்கள் புருவங்களை உயர்த்த.. ஆத்திரம் அவர்களின் கண்களை சிவக்க வைக்க… கொடி மரத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்ததனர் அந்த அதிகாரிகள் … அதுவே அந்த தேசியக்கொடிக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தந்தது…

எதுவுமே தெரியாதது போல, தம்புச் செட்டித் தெருவில், தனியாளாய் நடந்து கொண்டிருந்தார் ‘பாஷ்யம் என்ற ஆர்யா’…

அதே 1932ம் வருடம், ஜனவரி 26ம் தேதியை, நாம் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறை கூவலை செயலாக்கவே, பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினார்… இதை செய்த போது, அவர் வயது 25.

தற்போதைய திருவாரூர் மாவட்டம்.. அந்நாளைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் சேரன் குளம் தான், அந்த ஆர்யா என்ற பாஷ்யத்தின் சொந்த ஊர்…


Share it if you like it