மதுராவில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டினார் அவுரங்கசீப் – இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தகவல் !

மதுராவில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டினார் அவுரங்கசீப் – இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தகவல் !

Share it if you like it

மதுராவில் கோயிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ இப்பதிலை அளித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் மெயின் புரியை சேர்ந்தவர் அஜய் பிரதாப் சிங். இவர், ஏஎஸ்ஐயிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏஎஸ்ஐ-யின் ஆக்ரா பிராந்திய அலுவலகம் பதில் அளித்துள்ளது. இதில், மதுராவிலிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அங்கு ஷாயி ஈத்காமசூதியை கட்டியதாக ஏஎஸ்ஐ தெரிவித்துள்ளது. எனினும், அக்கோயிலை கிருஷ்ண ஜென்மபூமி எனக் குறிப்பிடாமல் கேசவ்தேவ் கோயில் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக 1920-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவான அரசு கெஜட் குறிப்புகளை காட்டியுள்ளது.

அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது கிருஷ்ண ஜென்மபூமி கோயில் என ஏஎஸ்ஐ நேரடியாகக் குறிப்பிடவில்லை. தற்போது கிருஷ்ண ஜென்மபூமி என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் கோயில் முந்தைய காலங்களில் கேசவ்தேவ் கோயில் என்று அழைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐ தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், அயோத்தியை போல், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் மேல்முறையீட்டு வழக்குகள் உ.பி.யின் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் நடைபெறுகிறது. இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளில், மசூதி நிலத்தை முஸ்லிம்கள் கோயிலுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக தற்போது ஏஎஸ்ஐ அளித்த தகவல் பயன்படும் எனக் கருதப்படுகிறது.

இதுபோல், ஆக்ராவின் தாஜ்மகால் தொடர்பாகவும் ஆர்டிஐ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஏஎஸ்ஐ அளித்த பதிலின் அடிப்படையில் தாஜ்மகாலில் நடைபெறும் முகலாயப் பேரரசர் ஷாஜஹான் உருஸ் விழாவுக்கு தடை கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஷாயி ஈத்கா மசூதி மீது வழக்கு தொடுத்த வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் கூறும்போது, ‘‘இந்த மசூதி மீதான வழக்கு பிப்ரவரி 22-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஏஎஸ்ஐ அளித்ததகவலை முக்கியமாக முன்னிறுத்தி வாதம் செய்ய உள்ளோம்” என்றார்.


Share it if you like it