உலகின் முக்கிய கட்சி பா.ஜ.க.: ஆர்.எஸ்.எஸ். பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது; புகழும் அமெரிக்க பத்திரிகை!

உலகின் முக்கிய கட்சி பா.ஜ.க.: ஆர்.எஸ்.எஸ். பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது; புகழும் அமெரிக்க பத்திரிகை!

Share it if you like it

உலகளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என்று பிரபல அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அகில இந்திய காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த தேசியக் கட்சிகளாக இருந்து வருகின்றன. இதிலும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில், தற்போது கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருந்து வருகிறது. அதேபோல, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியும், தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. அதேசமயம், சிறு துளி பெரு வெள்ளம்போல, ஒவ்வொரு மாநிலங்களாக ஆட்சியைக் கைப்பற்றி வந்த பா.ஜ.க., தற்போது 2-வது முறையாக மத்தியில் ஆட்சியில் இருப்பதோடு, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை தன் வசப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான், உலகின் முக்கியமான கட்சியாக பா.ஜ.க. திகழ்வதாக அமெரிக்க பத்திரிகை பாராட்டு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்று வால் ஸ்டிரீட் ஜர்னல். இப்பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அக்கட்டுரையில், “இந்தியாவில் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலகளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக விளங்குகிறது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதேசமயம், 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற பா.ஜ.க., 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை மீண்டும் பெறும் முனைப்பில் இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில், இந்தியா ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக வெளிப்பட்டு வருவதுடன், இந்தோ – பசிபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு உறுதுணையாக, ஜப்பானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. அதேபோல, வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமன்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பா.ஜ.க.வின் உதவியின்றி செயல்படுவது பலன் தராது. எனினும், உலக மக்களால் பா.ஜ.க. சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனெனில், இந்தியர்கள் அல்லாத பலரும் அரசியல் மற்றும் கலாசாரத்தில் வளர்ந்து வரும் பா.ஜ.க.வின் வரலாறு பற்றி அறிந்திருக்கவில்லை. முஸ்லிம் சகோதரர்களை போல, பா.ஜ.க.வானது நவீனத்துவத்தின் முக்கிய விஷயங்களை தழுவியபோதிலும்கூட, மேற்கத்திய தாராளவாத விஷயங்கள் மற்றும் முன்னுரிமைகளை புறந்தள்ளுகிறது.

சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை போன்று, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்திச் சென்று, உலகளாவிய சூப்பர் ஆற்றல் கொண்ட நாடாவதற்கு பா.ஜ.க. நம்பிக்கை கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் லிகுட் கட்சியை போல, பாரம்பரிய மதிப்புகளுடன் கூடிய, வர்த்தக சந்தைக்கு ஆதரவான பொருளாதார நிலைப்பாட்டை அடிப்படையிலேயே பா.ஜ.க. இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்க நிபுணர்கள், குறிப்பாக இடதுசாரி தாராளவாத எண்ணம் கொண்டவர்கள், பிரதமர் மோடியின் இந்தியாவை, டென்மார்க்கை போல் ஏன் நீங்கள் இல்லை? என்று கேட்கிறார்கள். எனினும், இந்தியா ஒரு சிக்கல் நிறைந்த பகுதி. இங்கு வேறு சில விஷயங்களும் உள்ளன.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இந்தியாவின் வடகிழக்கில் பா.ஜ.க.வின் சமீபத்திய, குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் வலிமையான ஆதரவை பெற்று வலிமையான கட்சியாக விளங்குகிறது. ஜாதி வேற்றுமைக்கு எதிராக போராடுவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பங்கு முக்கியம் வாய்ந்தது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களுடனான எனது தீவிர, தொடர் சந்திப்புக்கு பின்னர், அவர்களது சில விமர்சனங்களுக்கு பின்பு, அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினர் பொதுவாக, ஒரு சிக்கலான மற்றும் சக்திவாய்ந்த இயக்கம் பற்றி புரிந்துகொள்ள முன்வர வேண்டும் என்று என்னை நானே சமரசப்படுத்தி கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it