போர் நிதியாக 4,000 கோடி ஒதுக்கிய கனடா – ட்ரூடோவை கசக்கி பிழியும் சமூக ஊடக பாரதியர்கள்

போர் நிதியாக 4,000 கோடி ஒதுக்கிய கனடா – ட்ரூடோவை கசக்கி பிழியும் சமூக ஊடக பாரதியர்கள்

Share it if you like it

சமீப காலத்தில் கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ச்சியான மரணம். அவர்களின் மரணத்தின் மர்மமான பின்னணி காரணமாக இந்திய உளவுத்துறை மீது கனடா அரசு குற்றம் சாட்டி வருகிறது . இந்த விவகாரத்தில் கனடாவில் தூதராக பணியாற்றிய இந்திய உளவுத்துறை பின்னணி கொண்ட ஒரு தூதரக அதிகாரியை பகிரங்கமாக குற்றம் சாட்டி அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. பதிலுக்கு பாரதமும் கனடா நாட்டு தூதரை வெளியேற்றியது. இதோடு முருகல் முடிவுக்கு வரும். சரிந்த தனது செல்வாக்கை கட்டி எழுப்பலாம் என்று காத்திருந்த கனடா பிரதமருக்கு பாரதத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கிறது

ஒருபுறம் பாரதம் கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் முடிவை நிறுத்தி வைத்திருக்கிறது . மறுபுறம் பாரதத்தின் முன்னணி வர்த்தக தொழில் நிறுவனமான மகேந்திரா தனது இயக்கத்தை கனடாவில் முடிவுக்கு கொண்டு வந்து வெளியேறப் போவதாக அறிவித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக டாட்டா ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு குழுமங்களும் கனடாவில் இருந்து வெளியேறக் கூடும் என்ற அச்சம் கனடாவில் எழுகிறது. எரிவாயு வியாபாரம் சுற்றுலா ஐடி தொழில் நிறுவனங்கள் என்று ஸ்மார்ட் வொர்க் பொருளாதாரத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருப்பது கனடா. ஆனால் பாரதம் உழைப்பு உற்பத்தி சார்ந்த தொழில் வளம் உணவுப் பொருள் உற்பத்தி விவசாயம் என்று முழுமையான தன்னிறைவு பொருளாதாரமாக இருக்கும் நாடு . பாரதம் போன்ற ஒரு வலுவான உணவு தொழில் உற்பத்தி வளம் நிறைந்த ஒரு தேசத்தை பகைத்துக் கொள்வது எந்த ஒரு நாட்டிற்கும் முழுமையான பலனை தராது . அதிலும் கனடா போல கொரோனா தள்ளாட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு நிச்சயம் நல்ல பலனை தராது. பாரதத்துடன் மோதுவது யானையோடு எறும்பு மோதுவது போல விஷயம் அதை கன்னடா செய்வது உசிதமல்ல என்ற அமெரிக்காவின் அறிவுரைக்கு பிறகும் கனடா இன்னமும் முரண்டு பிடிப்பது அவர்களுக்கே சிக்கலை தேடிக் கொடுக்கும்.

கனடா வாக்கு வங்கியில் ஒற்றை இலக்கத்தில் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களுக்காக ஒட்டுமொத்த தேசத்தின் இறையாண்மை சர்வதேச அரங்கில் கனடிய மக்களின் மரியாதை அனைத்தையும் கனடா நாட்டு பிரதமர் எதிர்வரும் தேர்தலின் அரசியல் வாக்கு வங்கிக்காக தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக கொட்டிக் கவிழ்த்து விட்டதாகவே கனடாவில் உள்நாட்டு ஊடகங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் பொதுமக்கள் வரை கனடா நாட்டு பிரதமரை குற்றம் சாட்டுகிறார்கள். போதாத குறைக்கு கனடாவில் பயங்கரவாத பின்புலம் இல்லாமல் தொழில் வியாபாரம் என்று நல்லெண்ண ரீதியில் அமைதியான ஒரு வாழ்க்கை வாழும் சீக்கிய சமூகம் சார்ந்த தொழில் அதிபர்களும் மருத்துவம் கல்வி வேலை வாய்ப்பு என்று உலகம் முழுவதும் விரைவில் வாழும் அமைதியை விரும்பும் சீக்கிய மக்களும் கனடா நாட்டு பிரதமரின் இந்த சில்லறைத்தனமான அரசியலும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் பொறுப்பற்ற அராஜகமும் தங்களின் மீதான நல்லெண்ணம் நம்பிக்கை மரியாதையை உலக அளவில் சீர்குலைக்கும் என்றே கொந்தளிக்கிறார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த நல்லெண்ண விரும்பும் சீக்கிய மக்களின் கோபத்தையும் கனடா நாட்டு பிரதமர் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

எப்படியாவது பாரதத்தை வழிக்கு கொண்டு வந்து காரியம் சாதித்து விடலாம் என்ற காத்திருந்த கனடா பிரதமருக்கு நேச நாடுகள் தொடங்கி 5 கண் நாடுகள் என்னும் உளவு பரிமாற்ற கட்டமைப்பில் இருக்கும் நாடுகள் வரை கனடாவை கண்டிக்கும் நிலையில் வந்திருப்பது அவருக்கு அதிர்ச்சியே. எந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்தை வைத்து கனடா நாட்டு பிரதமர் பாரதத்தின் உளவுத்துறை மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தாரோ? அந்த பாரதம் உளவுத்துறை அறிக்கைகள் பயங்கரவாதிகளின் பட்டியல்கள் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததற்கான ஆவணம் அவை கடந்த காலங்களில் பலமுறை இந்திய வெளியுறவுத் துறை மூலம் கனடாவின் வெளியுறவு துறைக்கும் உளவுத்துறைக்கும் தகவல் பரிமாற்றமாக கொடுக்கப்பட்ட விபரங்கள் வரை அத்தனையும் ஆவணப்படுத்தி சர்வதேச சமூகத்தில் ஐந்து கண் நாடுகளுக்கு தனித்தனியே அனுப்பிவிட்டது. ஆனால் பாரதத்தின் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இதுவரை எந்த ஒரு ஆவணங்களையும் முன்வைக்கவில்லை.

கனடாவின் சிறுபிள்ளைத்தனமான இந்த செய்கையால் பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத் துறை மீது கேள்வி எழுப்பும் தங்களின் செய்கை எப்படிப்பட்ட தவறான புரிந்துணர்வுகளை அல்லது ராஜ்ய பின்னடைவுகளை ஏற்படுத்துமோ ? என்ற அச்சம் ஐந்து கண் நாடுகளுக்கும் உண்டு. அந்நாடுகள் வெளிப்படையாக பாரதத்தை விமர்சிக்கவோ கண்டிக்கவோ இந்த விவகாரத்தில் இடம் இல்லை . மாறாக இது கனடாவிற்கு தேவையில்லாத ஆராய்ச்சி அவர்களது நாட்டு குடிமகனின் மரணத்திற்காக நாங்கள் அனுதாபப்படவே முடியும். பாரதத்தை கேள்வி எழுப்பும் முகாந்திரங்கள் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக கனடாவின் முட்டாள் தனத்தை அம்பலப்படுத்தி ஒதுங்கிக் கொண்டது.

முழுமையாக நம்பிக்கிடந்த உள்நாட்டு அரசு வாக்கு வங்கி அரசியல் முதல் தனது நெருங்கிய நட்பு நாடுகள் ஐந்து கண் நாடுகள் வரை அனைத்தும் வரிசையாக கை விரிக்க இழந்த செல்வாக்கை சரிகட்ட போய் இருக்கும் செல்வாக்கையும் இழந்து நிற்கிறார் கனடா நாட்டு பிரதமர். இந்நிலையில் குப்புற விழுந்த போதிலும் எனது மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக ஏதேனும் யுத்தம் நெருக்கடி என்று வரும் பட்சத்தில் அதை சமாளிப்பதற்காக நான்காயிரம் கோடி ரூபாயை கனடா நாடு ஒதுக்கி வைத்திருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தப் போர் நெருக்கடியும் இதற்காக இவர்கள் ஒதுக்கிய பணமும் அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்கவோ அல்லது அவர்கள் தங்களின் எதிர்ப்பை பாரதத்தை விடுத்து கனடா நாட்டிற்கு எதிராக திருப்பும் பட்சத்தில் உள்நாட்டு குழப்பங்களுக்கு செலவழிக்கவோ நிச்சயம் உதவலாம். அதை மனதில் வைத்துக் கூட கனடா பிரதமர் இந்த நிதியை ஒதுக்கி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதே பாரதத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை பாகிஸ்தானுடன் ஏதேனும் நெருக்கடி முற்றும் போதோ அல்லது சீனாவுடன் ஏதேனும் உரசல் வந்தாலும் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் ஒரு புறம் அந்நிய அடிவருடிகள் வெளிப்படையாக பாரதத்தின் ஆட்சியாளர்களை அவமதித்து தங்களின் மகிழ்ச்சியை வெற்றி திருவிழாவாக கொண்டாடி தீர்ப்பார்கள். மறுபுறம் தேசியவாதிகள் ராணுவ வீரர்களின் உயிர் பாதுகாக்க தேசத்தின் நலனும் பாதுகாப்பும் உறுதிப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். இன்னும் சிலர் கடந்த கால ஆட்சியாளர்களின் குளறுபடிகள் பிரிட்டிஷாரின் சுதந்திரம் என்ற பெயரிலான சூழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன் வைத்து தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள். மொத்தத்தில் தேசவிரோதிகள் மகிழ்ச்சியில் துள்ளுவதும் தேசியவாதிகள் பெரும் மனக்கவலையிலும் வருத்தத்திலும் ஆழ்வதுமான சூழலே நிலவும். ஆனால் இன்று கனடாவுடன் இவ்வளவு பெரிய முருகல் ராஜிய ரீதியான சிக்கல் மேலெழும் போதும் பாரதம் அசராமல் அடுத்தடுத்து திருப்பி அடித்துக் கொண்டே வருகிறது. எங்கும் பின்னடைவு இல்லை. எந்த ஒரு நாட்டின் தரப்பிலிருந்தும் பாரதத்தை கண்டிக்கிறோம் அல்லது வலியுறுத்துகிறோம் என்று அறிக்கைகள் இல்லை . மாறாக தேசத்தின் உள்ளிருக்கும் மக்களிடத்திலும் எள்ளளவும் குழப்பமோ சந்தேகமோ அச்சமோ இல்லை . மாறாக எதிர்வரும் காலங்களில் எல்லா விஷயங்களிலும் கனடாவை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது .அது உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அளவில் மிகப் பெரிய அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது . தேசம் தேசத்தின் நலன் பாதுகாப்பு என்ற உணர்வும் விழிப்புணர்வும் மேலோங்கி நிற்கிறது. இது உண்மையில் ஒவ்வொரு பாரதியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

சாதாரணமாக எந்த ஒரு நாட்டில் இருந்து பாரதத்திற்கு எதிரான குரலோ கண்டனமோ எழும் பட்சத்தில் அண்டை நாடுகளுடன் மோடி அரசு நட்புறவு வளர்க்கவில்லை. வெளியுறவுத் துறையை நிர்வகிக்க திறமை இல்லை என்று காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மேடை போட்டு பேசுவார்கள். மோடிக்கு நாட்டை ஆள தெரியவில்லை. என்னிடம் கொடுத்தால் எல்லாவற்றையும் ஒரே நாளில் சரி செய்வேன் என்று ராகுலும் விமர்சனம் செயவார். இம்முறை ராகுல் பெட்டி தூக்க போய் விட்டார். காங்கிரஸ் முதல் கெஜ்ரிவால் வரை மயான அமைதி.

காஷ்மீர் முதல் தமிழகம் வரை இருக்கும் ஒவ்வொரு பிரிவினைவாதியும் பாரதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வைத்திருக்கும் அந்தந்த நாட்டிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பார்கள். அந்த விஷயத்தில் சமூக நீதி, சம நீதி என்று பாரதத்தின் ஆட்சியாளர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் திமுக விசிக நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்னும் ஒரு படி மேலே போய் பாசிசம் ஆரியம் பார்ப்பனம் என்று கம்பு சுற்றுவார்கள். ஆனால் இன்று பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர்தான். அவரிடம் சிக்கி சீரழிந்து கிடக்கும் கனடா நாட்டு பிரதமர் ஒரு கிறிஸ்தவர் தான் .ஆனால் அய்யோ ஆரியம் பார்ப்பனம் சிறுபான்மை சமூகம் சார்ந்த ஒரு பிரதமரை என்ன பாடு படுத்துகிறது ? பாருங்கள் என்று இதுவரையில் யாரும் ஒரு கண்டன குரலை கூட பதிவு செய்யவில்லை.

திமுக வழியில் பாராளுமன்றம் வரை சமூக நீதியை நிலை நிறுத்தும் ஆ ராசா உள்ளிட்ட யாரும் ஜெய்சங்கர் என்னும் ஆதிக்க சாதி சார்ந்த ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரின் பிடியிலிருந்து பாவப்பட்ட கனடா நாட்டு பிரதமரை மீட்டெடுப்பதற்காக இதுவரை ஒரு குரலும் பதிவு செய்யவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூட அந்த கனடா நாட்டு பிரதமரின் கண்ணீருக்கு ஒரு நிவாரணம் தேடவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் தான். ஆனால் கனடா நாட்டு தமிழர்களை பத்திரமாக மீட்டு வர தமிழக அரசு பேருந்துகள் தயாராக இருக்கும் என்று நம்பலாம்.

இந்தியா இலங்கை என்று வந்தால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் மேடையிலேயே சிறப்பு அழைப்பாளர்களாக உபசரிப்பு என்று கடந்த காலங்களில் பாரதத்தின் எதிரிகள் என்னுடைய நண்பர்கள் என்று வெளிப்படையான அரசியல் செய்த நாம் தமிழர் கட்சி சீமான் பல முறை கனடாவிற்கு பிரயாணப்பட்டு வந்தவர் .கனடா நாட்டு உள்துறை உளவுத்துறையில் விசேஷ கவனிப்பிற்கு பலமுறை ஆளானவர் என்பதால் இம்முறை கனடா நாட்டு விஷயத்தில் எதுவுமே தெரியாதது போல் அமைதியாக கடந்து போகிறார். இவையெல்லாம் நமக்கு சொல்ல வருவது ஒரே ஒரு செய்தி தான். பாரதம் கடந்த காலங்களை போல் பலவீனமாக இல்லை. பாரதத்தின் வெளியுறவுத் துறையும் ராஜ்யப் பரிபாலனமும் யாரிடத்தையும் உதவியை எதிர்பார்த்தோ அல்லது எந்த ஒரு நாட்டின் ஆதரவு அனுசரணையை வைத்து தனது தேசத்தை பாதுகாக்கும் நிலையிலோ இல்லை. மாறாக பாகிஸ்தான் சீனா போல அண்டை நாடுகளோ இலங்கை மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளோ அல்லது பிரிட்டன் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளோ எதுவானாலும் தேசத்தின் நலன் பாதுகாப்பு இறையாண்மை வரும்போது ஒரே நிலைப்பாடு தான் என்பதில் தெளிவாக இருக்கிறது.

அதேபோல் தேசத்தின் நலனையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் என்று வருமானால் காஷ்மீரின் பயங்கரவாதம் என்றாலும் சரி. மணிப்பூர் மாநிலத்தின் பிரிவினைவாதம் என்றாலும் சரி. எங்கோ ஒரு நாட்டில் அமர்ந்து கொண்டு பஞ்சாப் ஹரியானாவை பிரித்து கேட்டு பயங்கரவாதத்தை கட்டமைக்கும் காலிஸ்தான் பயங்கரவாதம் ஆனாலும் சரி. ஒரே பார்வை தான். ஒரே நிலைப்பாடு தான். தேசத்தின் நலன் பாதுகாப்பிற்கு துணை நிற்பவர்கள் யாராயினும் அவர்கள் பாரதத்தின் குடிமக்கள் அல்லது நண்பர்கள். நலன் விரும்பிகள். ஆனால் பாரதத்தின் குடிமக்களே ஆயினும் அவர்கள் தேசத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும் பட்சத்தில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு உலக அளவில் தேசத்திற்கு அவமதிப்பை தேடித்தரும் பட்சத்தில் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் தான். பயங்கரவாதிகள் தான். அவர்கள் தேசத்தின் எதிரிகள் தான். அவர்கள் மீதான நடவடிக்கையில் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக தெளிவாக நிற்கிறது. அந்த வகையில் தேசம் பாதுகாப்பான வலுவான கரங்களில் இருக்கிறது என்பதும் அவர்கள் உலக அரங்கில் எதையும் எதிர்கொண்டு தேசத்தை பாதுகாக்கும் முனைப்போடும் துணிவோடும் வலம் வருகிறார்கள் என்பது ஒவ்வொரு பாரதியனும் பெருமை கொள்ளும் நிகழ்வு . இதற்கு காரணமான இறை அருளுக்கும் இறை ஆசியோடு தேசத்தை பாதுகாப்பவர்களுக்கும் ஒவ்வொரு தேசப்பிமானியும் நன்றியோடு கரம் கூப்பி வணங்கும் நெகிழ்ச்சியான தருணம் இது.

ஜெய் ஹிந்த்


Share it if you like it