கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் மீது பாலியல் புகார்!

கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் மீது பாலியல் புகார்!

Share it if you like it

சென்னையைச் சேர்ந்த கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாசிலா (பெயர் மாற்றம்). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் இவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அப்புகாரில், “கடந்த 2020-ம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் எனக்கு அறிமுகமானார். இருவரும் நெருக்கமாக பழகினோம். அப்போது, என்னுடன் தனியாக இருக்கும்போது சாலமன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தார். பின்னர், இதைக் காட்டி மிரட்டியே எனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். மேலும், நாளுக்கு நாள் எனக்கு உடல் ரீதியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அவரிடமிருந்து விலக ஆரம்பித்தேன். ஆகவே, நாங்கள் தனியாக இருந்தபோது எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி தொடர்ந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதுகுறித்து சாலமனின் தந்தை செல்வகுமாரிடம் தெரிவித்தேன். ஆனால், அவரும் மகனுக்கு உடந்தையாக செயல்பட்டு என்னை மிரட்டுகிறார். இதனிடையே, சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் என்னுடைய ஆபாசமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அதோடு, எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார்.

தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் சபேஷ் சாலமன் பாட்டு பாடியே எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். ஆகவே, எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் யூடியூபரும், இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆடியோ ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இப்புகார் தொடர்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it