பரோட்டா சூரி ‘கொத்து பரோட்டா’!

பரோட்டா சூரி ‘கொத்து பரோட்டா’!

Share it if you like it

வீடு துடைக்க பயன்படுத்தும் ‘மாப்’ குச்சியில் தேசியக்கொடியை கட்டி பறக்க விட்டுவிட்டு, அதை கெத்தாக செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காமெடி நடிகர் பரோட்டா சூரியை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கொத்து பரோட்டாவாக்கி வருகின்றனர்.

தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்ற நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர்கள்தான். குறிப்பாக, ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் சடங்குகளையும் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சைகளில் சிக்குபவர்கள். கோயில்கள் கட்டுவதற்கு பதில் மருத்துவமனைகளை கட்டலாம் என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார் நடிகை ஜோதிகா. அதேபோல, சிலர் கோயில் கட்டுவதற்கு பதில் பள்ளிக் கூடங்களை கட்டலாம் என்று கூறினார்கள்.

இப்படி கோயில்களை பற்றிப் பேசி பலரும் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய காமெடி நடிகர் பரோட்டா சூரி, கோயில் மற்றும் அன்னச்சத்திரங்களை கட்டுவதை விட, ஒரு மாணவரை படிக்க வைப்பது மேலானது என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து, ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் நடிகர் சூரிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் பேரரசு போன்றவர்களும் சூரியை வெளுத்து வாங்கினார்கள். நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு சூரியை வறுத்தெடுத்து வந்தனர்.

இந்த நிலையில்தான், தேசியக்கொடியை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பரோட்டா சூரி. அதாவது, 75-வது சுதந்திர தினத்தை அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடுவதால், வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினார்கள். தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த், அர்ஜூன், விஜய் உள்ளிட்டோரும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சிலரும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்கள். அந்த வகையில், காமெடி நடிகர் பரோட்டா சூரியும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி, அதை போட்டோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், அவர் தேசியக்கொடியை கட்டி இருந்தது வீடு துடைக்கப் பயன்படும் ‘மாப்’ குச்சி என்பதுதான் விவகாரம். அதாவது, தேசியக்கொடி என்பது மிகவும் புனிதமானது. ஆகவே, அக்கொடியை கட்டுவதற்கு இடம், பொருள் என்பது மிகவும் அவசியமானதாகும். அப்படி இருக்க, காமெடி நடிகர் பரோட்டா சூரியோ, துடைப்பக் குச்சியில் தேசியக்கொடியை கட்டி அவமதித்திருக்கிறார். இதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. இதை் பார்த்த நெட்டிசன்கள் சூரியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், சமூக ஆர்வலர்கள், தேசநல விரும்பிகள் பலரும் சூரியின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it