சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் நிர்வாகி : பதிலடி கொடுத்த பாஜக !

சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் நிர்வாகி : பதிலடி கொடுத்த பாஜக !

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவரான பிட்ரோடா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பேசிய தோல் நிறம் குறித்த சர்ச்சை கருத்து நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் மோடியும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் யுபிஏ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசு ஆட்சி அமைத்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பிட்ரோடாவை இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக ஆக்கினார். கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பொது உள்கட்டமைப்புக்கான ஆலோசகராக இருந்தார்.

அவர் பேசிய சர்ச்சை கருத்து : பேட்டி ஒன்றில் 75 ஆண்டுகளாக இந்தியர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று தெரிவித்த சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சி நாட்டை வேற்றுமையிலும் ஒற்றுமையாக வைத்திருந்தது என்று தெரிவித்தார். அதுகுறித்து விரிவாகக் கூறும்போது, “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

பிட்ரோடாவின் சர்ச்சை கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் “அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருமையான பாரதியன்” இவ்வாறு பதிவிட்டு தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Share it if you like it