தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் மனு தள்ளுபடி!

தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் மனு தள்ளுபடி!

Share it if you like it

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் மோடி என்கிற குடும்பப் பெயர் வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி பேசினார். இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவது போல இருப்பதாகக் கூறி, குஜராத் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதில், ராகுல் குற்றவாளி என்று அறவித்த நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்ததுடன், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். இத்தீர்ப்பைத் தொடர்ந்து, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 3-ம் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி, மேல்முறையீடு செய்தார். அப்போது, அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, 13-ம் தேதி விசாரணை நடைபெற்றபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.பி.மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. ராகுலுக்கு இடைக்கால தடை கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் இடைக்கால தடை கிடைத்திருந்தால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாவதற்கு வழிவகை செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it