எங்கே அமைதி.? அமைதி மார்க்க பூமியில்.!!

எங்கே அமைதி.? அமைதி மார்க்க பூமியில்.!!

Share it if you like it

அமைதியை மட்டுமே போதிக்கும் மதம் என இஸ்லாம் மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் சிலர் கூறினாலும், நாடு பிடிக்கும் ஆசையில், இஸ்லாமிய நாடுகளிலும், கிறிஸ்துவ நாடுகளிலும் எத்தனையோ சண்டைகள், சச்சரவுகள், போராட்டங்கள், கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

நமது இந்திய நாட்டை கூட, நாடு பிடிக்கும் ஆசையினால் தான், கிறிஸ்தவர்கள் நம்மை அடிமைப் படுத்தி வைத்து இருந்தனர். அவர்களுக்கு முன்னர், இஸ்லாமியர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் தான், நமது நாட்டை அடிமைப்படுத்தி, பெருந் துயரத்தை மக்களுக்கு ஏற்படுத்தினர்.

தற்போது  தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு, அப்பாவி ஏழை எளிய மக்களுக்கு தொந்தரவு கொடுத்து, அவர்களை குற்றுயிரும், குலையுயிருமாக சொந்த நாட்டில் இருந்து, அகதிகளாக அனுப்பி கொண்டு இருக்கும் ஒரு தேசமே, ஆப்கானிஸ்தான். அங்கு நடக்கும், தாலிபான்களின் கொடூரமான செயல்களை, பலர் கண்டித்தாலும், தமிழகத்தில் சிலரால் மிகவும் பாராட்டப் படுவது, தேசபக்தர்கள் இடையே மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

தாலிபான்:

“தாலிபான்” என்ற வார்த்தைக்கு பாஷ்தோ மொழியில் “மாணவர்கள்” என்று அர்த்தம். 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஆப்கானிஸ்தானை, தங்கள் வசமாக்க முயன்ற சோவியத் படைகளுக்கு எதிராக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்  “முஜாஹிதீன்” (போராளிகள்) என அழைக்கப் பட்டனர்.

1989 ஆம் ஆண்டு, சோவியத் படைகள், முற்றிலுமாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு, உள்நாட்டு போரில், சிலர் ஈடுபட்டார்கள். அதில் இருந்து உருவானவர்களே, “தாலிபான்கள்”. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், தென் மேற்குப் பகுதியிலும் இருந்தார்கள். கிட்டத்தட்ட,1998 ஆண்டிற்குள்  மொத்த ஆப்கானிஸ்தானையும், தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தாலிபான்களின் வளர்ச்சி:

“அல்கொய்தா” என்ற தீவிரவாத இயக்கம், ஒசாமா பின்லேடனின் தலைமையில் இயங்கியது. அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தை தாக்கியவுடன், அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும், அல்கொய்தா பற்றிய பார்வை, முற்றிலும் மாறியது. தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து தான், ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுர தாக்குதலை ஒருங்கிணைத்தார்.

இதற்கு மூலக் காரணமாக இருந்த, ஒசாமா பின்லேடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பலமுறை கேட்டுக் கொண்டும், அல்கொய்தா ஒப்படைக்க மறுத்தது.

இதனால், அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் தாலிபான்கள் மீதும், அல்கொய்தா மீதும், கோபம் அதிகரித்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படை:

தாக்குதலுக்கு துணையாக இருந்த தாலிபான்களையும், ஆப்கானிஸ்தானையும் முற்றிலும் அழிக்க, அமெரிக்கா உறுதி பூண்டது. ஆப்கானிஸ்தான் தேசத்தை, தங்களின் இருப்பிடமாக, தாலிபான்கள் பயன்படுத்துவதை, அமெரிக்கா தடுத்து நிறுத்த எண்ணியது. அதனால், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்தது. அமெரிக்காவின் தாக்குதலால், தன்னுடைய ஆட்சியை இழந்த தாலிபான், அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதலை நடத்தியது. இதன் மூலமாக, அமெரிக்காவிற்கும், தாலிபானுக்கும் இடையே பகை அதிகமானது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா தனது படையை நிறுத்தியது. இதனால் ஏதும் செய்ய முடியாமல் இருந்த தாலிபான்கள், அமெரிக்காவுடன் சமரசம் பேசினார்கள். 2017 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ள, ஒரு நிர்ப்பந்தம் வைத்தது. அது, “அல்கொய்தாவோ அல்லது வேறு எந்த அமைப்புகளோ, அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்புக்கு, எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தக் கூடாது என்றும், அவர்களின் தேசத்தில் எந்தவித தீவிரவாத செயலுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்றும், கோரிக்கை வைத்தது.

கோரிக்கையை ஏற்றதால், அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இதன் பின்னர், தாலிபான்களின் அட்டகாசம் தலை தூக்கியது. அமெரிக்கா படை  விலக்கப்பட்ட பின்னர், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை வெகு சுலபமாக கைப்பற்றி, தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தாலிபான்களின் கொள்கைகள்:

  • ஷரியத் சட்டத்தை கடுமையாக பின்பற்றுவார்கள்.
  • பெண்கள் வேலைக்கு செல்வதற்கோ அல்லது படிப்பதற்கோ தடை.
  • ஒரு பெண், ஆண் பாதுகாவலருடன் இல்லாவிட்டால், அந்த பெண் வீடுகளில் அடைக்கப் படுவார்.
  • மரண தண்டனை மற்றும் கசையடி தண்டனைகள் பொதுவானவை.
  • மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்கு தடை.
  • இஸ்லாத்தின் பார்வையில் விரோதமாக இருக்கும், எந்தவித கலாச்சார அமைப்புகளுக்கும் தடை.
  • எதிரிகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் புத்தகங்களுக்கு தடை.
  • ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும்.
  • முழு உடலையும் மறைக்கும் புர்காவை, பெண்கள் அணிய வேண்டும்.
  • சினிமா, தொலைக் காட்சிகளுக்கு முற்றிலுமாக தடை.

கண்டா வரச் சொல்லுங்க:

“இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை” எனக் கூறிய முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,

“மத சகிப்புத் தன்மை இந்தியாவில் இல்லாததால், நாட்டை விட்டே வெளியேறத் தோன்றுகிறது”, எனக் கூறிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான், போன்றோர் பற்றி எரியும் ஆப்கானிஸ்தானைப் பற்றி, இதுவரை என்ன கருத்து கூறினார்கள்?

சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கி குற்றுயிரும், குலை உயிருமாக, சொந்த நாட்டை விட்டே துரத்த படுகின்றனர். இதனை பார்த்து கண்டும், காணாதது போல் இருக்கும் சம்பந்தப் பட்டவர்கள், தாலிபானுக்கு எதிரான கருத்துக்களை சொல்ல முன் வருவார்களா?

பிரவுன் பல்கலைக்கழகம் ஆய்வு:

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடந்த போர் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 2020 ஆம் ஆண்டு வரை, 978 பில்லியன் டாலர், அமெரிக்கா  செலவழித்து இருப்பதாக, பிரவுன் பல்கலைக்கழகம், தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

அங்கு நடைபெற்ற போரில், 69 ஆயிரம் ஆப்கன் வீரர்கள் இறந்து இருக்கிறார்கள் எனவும், பொதுமக்கள் மற்றும் தாலிபான்களில் பல ஆயிரம் பேர் இறந்து இருக்கிறார்கள் எனவும், பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவித்து உள்ளது.

உலகிலேயே புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மூன்றாவது நாடு, “ஆப்கானிஸ்தான்” என ஐ.நா. சபை  அறிவித்து உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் (CAA) – ஏற்பட்ட நன்மைகள்:

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இந்தியா அடைக்கலம்  தரும். அந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

தேவி சக்தி:

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக, இந்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. தூதரக அதிகாரிகள் மூலம் வெளியுறவு அமைச்சகத்தின் 24 மணி நேரமும் செயல்படும், “சிறப்பு பிரிவு” ஏற்படுத்தப் பட்டு, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு என, பிரத்யேகமான முறையில், “இ-விசா” அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  24 மணி நேரமும் தொடர்புக் கொள்ளக் கூடிய வகையில், வாட்ஸ் அப், இமெயில், தொலைபேசி மூலம் வரும் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டு, தேவையானவர்களுக்கு உடனடியாக சந்தேகம் தீர்க்கப்பட்டு, உதவியும் செய்யப் பட்டு வருகின்றது.

மத்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் அளித்த தகவலின் படி, இதுவரை, 175 தூதரக ஊழியர்கள் மீட்கப் பட்டனர். மேலும், 263 இந்தியர்கள், இந்தியர்கள் – சீக்கியர்கள் உள்ளிட்ட 112 ஆப்கன் நாட்டவர்கள், மூன்றாம் நாட்டை சேர்ந்தவர்கள் 15 பேர் என இதுவரை மொத்தம் 565 பேர் மீட்கப் பட்டு உள்ளனர். ‛தேவி சக்தி’ என பெயரிடப்பட்ட இந்த மீட்பு பணிக்கு, 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஆப்கனைச் சேர்ந்த சிலரையும், இந்திய அரசு அழைத்து வந்து உள்ளது. விரைவில், அனைவரையும் மீட்பதில் இந்திய அரசு முழு உறுதி பூண்டுள்ளது. ஆப்கனில் உள்ள அனைத்து இந்திய மக்களையும், பத்திரமாக அழைத்து வருவதற்கு, இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

தாலிபான்களின் மதப்பற்று:

சமீபத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்ட, தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ள கருத்து, அவர்களின் மதப்பற்றை கோடிட்டுக் காட்டுகிறது. அவர் கூறியதாவது, “நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மதம் என்று வரும் போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்து இருக்கிறோம்; இரு நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கலக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை, மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம்”.

அமைதியை மட்டுமே விரும்புவதாக, கூறிக் கொண்டு இருந்தவர்களின் இன்றைய நிலையை, உலகமே பார்த்து பரிதாபப் படுகின்றது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க, விமானத்தில் தொங்கி பயணம் செய்ததால், அவர்கள் உயிர் நீத்த காட்சியை, பார்த்த அனைவரும் பதைபதைத்தனர்.

உலகிலேயே, எல்லா மதத்தினரும், மகிழ்ச்சியாக, அமைதியாக, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் நாடு, “இந்தியா” மட்டுமே. இங்கே வாழ்ந்து, வளர்ந்து  இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய அரசிற்கு எதிராகவும், கருத்துக்களை தெரிவித்து வருபவர்கள், ஒரு நிமிடமாவது, ஆப்கானிஸ்தானில் வாழ முன் வருவார்களா? என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு யாரும் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.

நமது நாட்டின் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு,  தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும், சில தீய சக்திகளை, மக்கள் அடையாளம் கண்டு, அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

“சேதமில்லாத ஹிந்துஸ்தானம்- இதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா”…

–   மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

 

. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it