பணம் கேட்டு கான்ட்ராக்டருக்கு மிரட்டல்: தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது!

பணம் கேட்டு கான்ட்ராக்டருக்கு மிரட்டல்: தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது!

Share it if you like it

பணம் கேட்டு கான்ட்ராக்டரை மிரட்டிய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் இ.பி. காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த இ.எம்.இ. என்கிற தனியார் நிறுவனம், தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் பெற்று செய்து வருகிறது. இதற்காக அனகாபுத்தூர் பக்தவச்சலம் பகுதி வழியாக லாரிகள் மணல், ஜல்லி போன்றவறறை எடுத்துச் சென்று வருகின்றன.

இந்த நிலையில், அவ்வழியாக தொடர்ச்சியாக லாரிகள் செல்வதை, அப்பகுதியின் 4-வது வார்டு கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ்குமரன் கவனித்திருக்கிறார். பின்னர், அந்த லாரிகளை மடக்கி, அவ்வழியாகச் செல்வதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டி இருக்கிறார். இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ்குமரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆளும்கட்சி கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it