முரசொலியின் செயல் வெட்கக்கேடானது: ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் காட்டம்!

முரசொலியின் செயல் வெட்கக்கேடானது: ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் காட்டம்!

Share it if you like it

ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி, ஆதாரமற்ற தகவல்களை எடுத்து பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதுாறு பரப்புவதும் வெட்கக்கேடானது என்று அந்த இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழ், வாட்ஸ் ஆப்பில் வந்தது என்று சொல்லி, ‘நம் உயிர் உள்ளவரை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நுழையக் கூடாது’ என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக ஒரு மீம்ஸை நேற்று வெளியிட்டிருக்கிறது. இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான தகவல். முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 2-வது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வால்கரின் 51-வது பிறந்த நாள் விழா, 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், மதுரையில் நடந்த விழாவுக்கு முத்துராமலிங்கத் தேவர்தான் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், தமது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது என்றார். உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தார் என்று சொல்லி, மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த தி.மு.க.வும், அதன் நாளிதழும் முயற்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதுாறு பரப்பவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it