தொடர்ந்து சனாதனத்தை அவமதிக்கும் திமுக சபாநாயகர் – எம். அப்பாவு

தொடர்ந்து சனாதனத்தை அவமதிக்கும் திமுக சபாநாயகர் – எம். அப்பாவு

Share it if you like it

மூச்சுக்கு 300 தடவை நாங்கள் திராவிட மாடல் வழி வந்த ஆட்சியாளர்கள். சமூக நீதி காவலர்கள் – சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மதச்சார்பற்ற அரசை சட்டத்தின் வழியில் முன்னெடுப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். ஒவ்வொரு பொது மேடையிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்திற்கு ஆதரவாகவும் அந்த அபிமானத்தை வெளிப்படுத்துபவர்களாகவும் தங்களை வெளிப்படுத்த ஒரு குறிப்பிட்ட சாராருக்கு எதிராக விஷம கருத்துக்களையும் வன்மத்தையும் பரப்பும் விதமாக தொடர்ச்சியாக பேசி வருவது தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்கதை ஆகிறது. அதிலும் முதல்வர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் – கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்று தொடர்ச்சியாக இந்த மண்ணின் பெரும்பான்மை ஒரு குறிப்பிட்ட சாராரை தொடர்ந்து துவேஷிப்பதும் ஒரு குறிப்பிட்ட வாழ்வியலை பின்பற்றுபவர்களை தொடர்ந்து அவதூறு பேசுவதும் தொடர்கதையாகிறது.

இந்நிலையில் வெளிப்படையாக கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக அவர்களின் அபிமானியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கிறிஸ்தவர் அல்லாதவர்களை அவமதித்து அவதூறு பேசும் வகையில் சமீபகாலமாக தொடர்ச்சியாக பேசி வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியவர் சனாதனம் தான் நாட்டை வளர்த்ததா? ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே கல்வி கற்க முடியும். நிலம் வாங்க முடியும் என்ற நிலை தான் இருந்தது . திராவிட மாடல்தான் அனைத்து தரப்பினருக்கும் எல்லாம் கிடைக்கும் உத்தரவாதத்தை கொடுத்து இருக்கிறது என்ற வகையில் பேசி மீண்டும் மத துவேஷத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

8 சதம் இருந்தவர்களுக்கு தான் நிலம் – கல்வி சொந்தம். வேறு யாரும் கல்வி கற்க முடியாது. நிலம் வாங்க முடியாது என்ற கொடுமை இருந்தது. தற்போது கூட விழுப்புரம் அருகே ஒரு குருகுலம் இருக்கிறது .அதில் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தவர்கள் தவிர வேறு யாரும் சேர்ந்து படிக்க முடியாது என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அந்த 8 சதம் இருந்தவர்கள் கல்வியை சீர்குலைக்க நீட் தேர்வை கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். இதே மேடையில் தூத்துக்குடியில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களின் கலந்து கொண்டதும் இதுவரையில் திரு அப்பாவு அவரின் இந்த பேச்சை அவரோ அவரின் கட்சி தலைமையோ முதல்வரும் கண்டிக்காததும் இவர்கள் அனைவரும் அவரின் கருத்தை ஆமோதித்து ஆதரிப்பதையே வெளிப்படுத்துகிறது.

சனாதனம் தான் நாட்டை வளர்த்தது என்று யாரும் பேசவில்லை. ஆனால் இந்த உலகத்தையே சனாதனம் தான் வளர்த்தது .பாதுகாத்தது .இன்றளவும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை கொரோனா காலகட்டத்தில் உலகமே பார்த்தது . உலகமே பேசியது அப்பாவின் கண்களுக்கும் காதுகளுக்கும் மட்டும் எட்டாமல் போனது ஆச்சரியம் தான்.

அவர் குறிப்பிடும் ஒரு கள்ளக் குறிச்சி குருகுலம் எந்த கல்விக்காக உருவாக்கப்பட்டதோ? அந்த கல்வியை கற்பதற்கான நிபந்தனைகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு நடப்பவர்கள் மட்டுமே அந்த குருகுலத்தில் கல்வி கற்க முடியும். மாறாக என் தட்டு – என் உணவு – என் உரிமை என்று பேசுபவர்கள் அங்கு நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு கல்வி நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட மாட்டேன் என்று பேசுபவர்களுக்கு அந்த கல்வி நிறுவனத்தின் விதிகளை மீறி அனுமதி கேட்பது எப்படிப்பட்ட சமூக நீதி? . இவர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா கல்லூரிக்கு கூட கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கென்று மாணவர்களுக்கு குறைந்தபட்ச விதிமுறைகள் வழிகாட்டும் நெறிமுறைகள் இருக்கும் தானே? அதற்கு உட்படாத மாணவருக்கு அந்த கல்லூரியில் இடம் சேர்க்கை கிடைப்பதற்கு இவரால் ஆவண செய்ய முடியுமா ? ஒரு கல்வி நிறுவனத்திற்கு இந்த குறைந்தபட்ச விதி உரிமை பாதுகாப்பு இருக்குமானால் அந்த பாதுகாப்பும் விதிமுறையும் ஏன் கள்ளக் குறிச்சி கல்வி நிறுவனத்திற்கு இருக்கக் கூடாது எனில் எங்கே போனது இவர்களின் சமூக நீதி? அப்படியானால் இவர்களின் சமூக நீதி எல்லாம் இவர்களுக்கும் இவர்களின் சார்பானவர்களுக்கு மட்டும்தான். இந்துக்களுக்கு இல்லை என்று அப்பாவு வெளிப்படையாக சொல்கிறாரா.?

ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே நிலங்கள் சொந்தம் வேறு யாருக்கும் நிலம் கிடையாது என்று இவர் சொல்வது உண்மை ஆனால் இங்குள்ள நிலங்கள் உரிமையாளர்கள் முதல் கடந்த கால நிலச் சுவான்தார் வரை எத்தனை பேர் 8 சதம் சார்ந்தவர்கள் என்று சொல்வாரா? ‌இன்றளவும் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கென்று அவர்களின் முன்னேற்றத்திற்கென்று காலம் காலமாக வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட கடை கோடி மக்களின் நிலங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது.? இல்லை அந்த நிலங்கள் கூட பிரிட்டிஷார் கொடுத்தது அல்லது கிறிஸ்தவர்கள் தான் கொடுத்தார்கள் என்று சொல்லித் தன் விசுவாசத்தை உயர்த்தி பிடிப்பாரா ?.

ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் தான் கல்வி கற்க முடியும் என்று சொல்லும் அதே அப்பாவிற்கு இந்து மதத்தில் உயர்ந்த குரு ஸ்தானத்தில் வைத்து வழிபடும் 12 வைணவ ஆழ்வார்கள் – 63 சைவ நாயன்மார்கள் – 18 சித்தர்கள் வரிசையில் எத்தனை பேர் அந்த குறிப்பிட்ட சார்ந்த 8 சதம் சமூகம் சார்ந்தவர்கள் .அந்த குறிப்பிட்ட சமூகம் சாராமல் இவர் குறிப்பிடும் அந்த அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்தவர்கள் எத்தனை பேர் உயர்ந்த கல்வியும் தேர்ந்த ஞானமும் கொண்ட ஆன்மீக ஞானிகளாக மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்தும் குரு ஸ்தானத்தில் இருந்தவர்கள் என்பது அவருக்கு தெரியுமா? .

இன்று உலகப் பொதுமறையாக கொண்டாடும் திருக்குறளை கொடுத்த வள்ளுவன் நாயனார் எந்த சமூகம் சார்ந்தவர்? நாயன்மார்களில் இவர் குறிப்பிடும் அந்த ஆலயத்தில் சிலை வைத்து அவரை தெய்வமாக அபிஷேகித்து ஆராதனை செய்யும் 8 சதம் சமூகம் சமூகத்தவரும் வணங்கும் பேறு பெற்ற நந்தனார் எந்த சமூகம் சார்ந்தவர் ? சிவபெருமானுக்கு கண் கொடுத்து கண்ணப்பர் என்று இன்றளவும் வணங்கப்படும் வேடுவர் குல கண்ணப்பர் எந்த சமூகம் சார்ந்தவர்.? தசாவதாரங்களில் எத்தனை அவதாரங்கள் இவர் உயர் சாதி குலம் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சமூகத்தில் நிகழ்ந்தது? எத்தனை அவதாரங்கள் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லும் அந்த சாதிகளில் சமூகங்களில் நிகழ்ந்தது என்பது அவருக்கு தெரியுமா. ?

வாமன அவதாரம் தவிர்த்து தசாவதாரங்களில் பெரும்பான்மை அவதாரங்கள் சாதாரண சமூகங்களில் தான் பிறந்தது என்பது அவருக்கு தெரியுமா.?

இவர்கள் பார்ப்பனிய கடவுள் என்று துவேஷம் பேசும் ராமன் – அந்த ராமனின் ராம காவியத்தை தொகுத்து அளித்த வால்மீகி முனிவர் 8 சதம் சமூகம் அல்ல. உலகமே போற்றி வணங்கும் பகவத் கீதையை கொடுத்த கிருஷ்ணன் அவன் பிறந்த குல- மும் வளர்ந்த குலமும் அவன் அரசாண்டது 8 சதம் சமூகம் குலம் அல்ல .அவனது குருஷேத்திர காவியத்தை உள்ளடக்கிய மகாபாரதத்தை தொகுத்தளித்த வியாசர் முனிவரும் 8 சதம் சமூகம் அல்லாதவரே.

சனாதனத்தை போற்றி வணங்கும் மக்களுக்கு சாதி மத அடையாளங்கள் உண்டு. ஆனால் வன்மங்கள் – துவேஷங்கள் கிடையாது. மதமாற்றம் என்ற பெயரில் மதவியாபாரம் செய்யும் நயவஞ்சகம் கிடையாது. மாற்று மதம் சார்ந்த நம்பிக்கைகள் – மக்களை அவமதிக்கும் – துன்புறுத்தும் துர்குணம் கிடையாது. சாதி -மத பாகுபாடுகள் பிளவுகள் கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கல்வி – ஞானம் – ஒழுக்கம் – பண்பாடு அதை எல்லாம் முன்னிறுத்தி தேசிய தெய்வீக பாதையில் மக்களை வழிநடத்தி நாட்டை பாதுகாப்பது என்ற தேசிய சிந்தனை மட்டுமே .அந்த ஒற்றை இலக்குடன் செயல்படுபவர்களை மதவாதிகள் என்றும் குறிப்பிட்ட சாராருக்கு எதிரானவர்கள் என்றும் விஷமப் பிரச்சாரம் செய்து வரும் அப்பாவு ,குறிப்பிடும் சாதி பாகுபாடுகளையும் பிளவுகளையும் கட்டமைத்து விஷம பிரச்சாரம் செய்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் இன்றளவும் மதமாற்றத்தில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் பள்ளி வகுப்பறை முதல் அலுவலகங்கள் வரை எல்லா இடத்திலும் மதமாற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர்கள் யார் ? என்று அவருக்குத் தெரியாதா? கட்டாய மதம் மாற்றத்திற்கு உடன்படாத காரணத்தால் மேல்நிலைப்பள்ளி மாணவி கொடுமைப்படுத்தப்பட்டதும் தாங்க முடியாத அந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் இவர்களது ஆட்சியில் இவர்களது கண் முன் தான் நிகழ்ந்ததை மறந்து விட்டாரா. ?

அறியாமையாலும் தவறான வழிகாட்டுதலாலும் தாய் மதம் துறந்து அந்நிய மதம் தழுவி போனவர்களை நம்முடைய பண்பாடு இதுதான் நம்முடைய பாரதத்தின் வழியில் வாழ்வோம் வாருங்கள் என்று தாய் மதத்திற்கு திரும்ப அழைப்பவர்களை பார்த்து மதவாதிகள் மத துவேஷிகள் என்று சொல்பவர்கள். எங்களின் கல்வி வளாகத்திற்குள்ளோ நிறுவன வளாகத்திற்குள்ளோ வந்துவிட்டால் எங்களின் மதத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை என்றால் இங்கு நீ இருக்க முடியாது. வியாபாரம் தொழில் வர்த்தகம் எதுவும் செய்ய முடியாது என்ற கட்டாயத்தை ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் முன்னெடுக்கும் மதமாற்றம் பற்றி இவர் பேசியது உண்டா ? அதனால் உயிரிழப்பு வரை போன பிறகு கூட குறைந்தபட்ச மனிதாபிமான நடவடிக்கை கூட இல்லாமல் மௌனம் காத்தவர். இன்று போகும் இடமெல்லாம் உண்மைக்கு மாறாக ஒரு சார்பாக வேஷம் பேசுவது அவர் வகிக்கும் சபாநாயகர் பதவிக்கு அழகா? .

அனைவருக்கும் சம நீதி சேர்ப்பது தான் சமூக நீதி என்றால் இவர்களது ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக இவர்களின் வன்மத்தாலும் தேசத்தாலும் துன்புறுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சாராரின் மன உளைச்சலுக்கு அவர்கள் சமூக நீதிக்கு யார் பொறுப்பு .? எந்த சாதிக்கும் பாரபட்சம் இன்றி சமூக நீதியை பாதுகாப்பவர்கள் வழங்குபவர்கள் இவர்களும் இவர்கள் சார்ந்த கட்சியும் ஆட்சியும் தான் என்றால் கண்முன்னே தமிழகத்தில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களும் பள்ளி மாணவர்களும் கூட தொடர்ச்சியாக சாதி துவேசத்தால் துன்புறுத்தப்படும் போது அதை இவர்கள் சார்ந்த கட்சிகாரர்களே செய்த போது இவர் எடுத்த நடவடிக்கை என்ன? இவரது கட்சி இனி அதுபோன்ற கசப்புணர்வுகள் தலை தூக்க வண்ணம் இருக்க செய்த சீர்திருத்தங்கள் என்ன? என்பதை சொல்வாரா.

மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு ஒரு மதத்தை உயர்த்திப் பிடிப்பதும் ஒரு குறிப்பிட்ட மதத்தையும் அதன் வாழ்வியலையும் அதன் நம்பிக்கையை பின்பற்றுபவர்களையும் துவேசிப்பதையுமே அரசியலாக கொண்டவர்களுக்கு சமூக நீதி பற்றியும் சம நீதி பற்றியும் பேசும் அருகதை இல்லை. சட்டத்தின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த சட்டத்தின் பலவீனங்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஆதரவாகவும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு எதிராகவும் பயன்படுத்தி அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு சனாதனம் பற்றியும் அது போதிக்கும் உண்மையான மானுட சமூக நீதிப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பின்பற்றி நடக்கப் போவதில்லை. அப்படிப்பட்டவர்கள் போகும் இடங்களில் எல்லாம் அந்த சனாதனத்தையும் அது சார்ந்தவர்களையும் இழுத்துப் பேசுவது எப்படிப்பட்ட சமூக நீதி. ?

ஆளுநர் ரவி போகும் இடங்களில் பேசும் இடங்களில் இந்தியாவின் வரலாற்றையும் தமிழகத்தின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரத்தையும் பேசுகிறார். மறைக்கப்பட்ட வரலாறுகளை பேசுகிறார். இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மை சம்பவங்களை வெளிக் கொணர்கிறார். அவர் சார்ந்த சனாதன தர்மத்தின் மகத்துவத்தை பேசுகிறார். இதுவரையில் எந்த ஒரு மாற்று மதத்தையோ அதன் சித்தாந்தங்களையும் அதைப் பின்பற்றி வாழும் மக்களையும் அவர் குறைவு படுத்தி பேசியது இல்லை. அதைப் பற்றிய தரக்குறைவான விமர்சனங்களையும் உண்மைக்கு மாறான விஷமப் பிரச்சாரங்களையும் அவர் எங்கும் பேசியது இல்லை .அப்படிப்பட்ட பண்பாளரை ஆளுநர் ரவியா? ஆர்எஸ்எஸ் ரவியா? மாகாண ஆளுநரா ? சனாதன போதகரா ? என்று ஏகடியும் பேசுபவர்கள் போகும் இடங்களில் எல்லாம் ஒரு சாராரை குளிர்விக்க உயர்த்திப் பிடிக்கிறேன் என்று சனாதனத்தை இழிவு படுத்தி பேசிவிட்டு தங்களை சமூக நீதி காவலர்கள் என்று அவர்களுக்கு அவர்களை பட்டமும் கொடுத்துக் கொள்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் பார்ப்பவர்களும் அமைதியாக இருப்பதனால் இவர்கள் சொல்வது உண்மை என்று அர்த்தம் ஆகி விடாது .இவர்களின் உண்மை முகம் மக்களிடம் அம்பலமாகி வெகு நாட்கள் ஆகிறது. ஆட்சியில் இருக்கிறார்கள் எதிர்த்து கேட்டு பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை .ஆடும் வரை ஆடட்டும் என்று அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுக்கும் காலம் வரும்போது நிச்சயம் அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள்.

சனாதனத்தின் வழியில் வந்த ஆட்சியாளர்களால் பெரும் யுத்தங்கள் தவிர்க்கப்படுவதும் அந்த யுத்தத்தின் பேரழிவுகள் தடுத்து நிறுத்தப்படுவதும் உயிர் கொல்லி நோய்களிலிருந்து உலகம் பாதுகாக்கப்படுவதும் உணவும் மருத்துவப் பொருட்களும் இந்த சனாதன பூமியில் இருந்து உலகெங்கும் பயணித்த போது அதை நன்றியோடு பெற்றுக் கொண்ட மக்களுக்கு தெரியும் . அந்த மக்களின் நலன் காக்க பாரதம் என்ற ஒரு சனாதன நாடும் அதன் வழி வந்த ஆட்சியாளர்களும் உலகிற்கு அவசியம் தேவை என்று உணர்ந்து அவர்களை உயர்த்தி பிடிக்கும் சர்வதேச ஆட்சியாளர்களுக்கும் தெரியும் . எங்கோ இருக்கும் மதமாற்ற பிரிவினைவாத கூட்டங்களின் வீசி எரியும் சில்லறைகளுக்காக சொந்த நாட்டில் பிரிவினைவாதமும் மதமாற்றமும் செய்து வாழும் சில்லறை தனமான ஆட்சியாளர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரிந்து கொள்ளும் அறிவும் இருக்காது. புரிந்தாலும் அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு கிடையாது. அதுதான் சனாதனத்தை உணர்ந்து பின்பற்றுபவர்களுக்கும் அதன் அருமை உணராது அதை துவேசிப்பவர்களுக்கும் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.


Share it if you like it