மீரா பாய் சானுவுக்கு ‘தோர்’ கதாநாயகன் பாராட்டு!

மீரா பாய் சானுவுக்கு ‘தோர்’ கதாநாயகன் பாராட்டு!

Share it if you like it

‘தோர்’ சுத்தியலை ஏந்தத் தகுதியானவர் இந்தியாவின் மீரா பாய் சானு என்று மார்வெல் சூப்பர் ஹீரோ ‘தோர்’ கதாநாயகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டி இருக்கிறார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்தவர் மீரா பாய் சானு. இவர் ஒரு பளு தூக்கும் வீராங்கனையாவார். இவர், 2020-ல் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளு தூக்கும் பிரிவில் மீரா பாய் சானு கலந்து கொண்டார். இதில், இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, இவருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பிரும் மீரா பாய் சானுவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். தனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தனது வெற்றியை கொண்டாடும் வகையிலும், மீரா பாய் சானு தங்கப் பதக்கத்துடன் கூடிய தனது போட்டோக்களை ட்விட்டரில் பதிவு செய்து, “201 கிலோ எடையை தூக்குவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் வெற்றி பெற்றதும், எனது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்த பில்லியன் கணக்கானவர்களின் அன்பு மற்றும் விருப்பத்திற்கு நன்றி. ஒவ்வொரு சவாலும் ஒரு முயற்சி மட்டுமே” என்று தெரிவித்திருந்தார்.

இவரது பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு ரசிகர், மீரா பாய் சானுவின் வலிமையை தோரின் வலிமையுடன் ஒப்பிட்டு, “தோர் தனது சுத்தியலை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று குறிப்பிட்டு, தோர் கதாநாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஆம், அதற்கு தகுதியானவர்தான் மீரா பாய் சானு. அவருக்கு வாழ்த்துக்கள். சாய்கோம் நீங்கள் லெஜெண்ட்” என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த மீரா பாய், “மிக்க நன்றி ஹெம்ஸ்வொர்த், எப்போதும் உங்களை பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். இவர்களின் இந்த பதிவு தற்போது தோர் ரசிகர்கள் மற்றும் மீரா பாய் சானு ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Share it if you like it