இருளர் குடியிருப்பில் கவர்னர்: பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்களுக்கு நேரில் பாராட்டு!

இருளர் குடியிருப்பில் கவர்னர்: பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடி வீரர்களுக்கு நேரில் பாராட்டு!

Share it if you like it

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.

அமெரிக்காவில் ஏராளமான பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. எனவே, இப்பாம்புகளை பிடிப்பதற்கு தங்களுக்கு உதவுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் அமெரிக்கா சென்று, அப்பாம்புகளை பிடித்துக் கொடுத்தனர். இதற்காக இருவருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில், விருது பெற்ற வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் ரவி, “ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும்.‌ இதுகுறித்து நான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறேன். மேலும், இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசில் பணியில் இல்லை என்பது தெரிகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள், இருளர் மக்களின் வளர்ச்சியே, இந்த இந்திய தேசியம் வளர்ந்ததாக அர்த்தம். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேசச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன்” என்றார்.

முன்னதாக, மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த கவர்னர், இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும்போது எடுத்த புகைப்படங்களையும் பார்வையிட்டார்.


Share it if you like it