மம்தா பானர்ஜி கடமையை செய்ய தவறினால், இந்திய அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை !

மம்தா பானர்ஜி கடமையை செய்ய தவறினால், இந்திய அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை !

Share it if you like it

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மாநில அரசு தனது கடமையை செய்யவில்லை என்றால், இந்திய அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 15 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய நண்பர் ஷேக் ஷாஜகான் வீடும் ஒன்று. அங்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்ற போது, திரிணமூல் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்குச் சென்ற மத்திய படையினரையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சேதம் அடைந்த வாகனங்களை விட்டு வெளியேறி ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் கூறியிருப்பதாவது:

அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது ஆபத்தான, கொடூரமான சம்பவம். மேற்குவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅல்ல. இது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்துவது நாகரிகமான அரசின் கடமை. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தனது கடமையை செய்ய தவறினால், இந்திய அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சாசனம் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு முந்தைய வன்முறை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அமலாக்கத் துறைஅதிகாரிகள் சோதனை செய்ய சென்ற போது அங்கு சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், மேற்கு வங்கத்திலும் அமலாக்கத் துறை அதிகாாிகள் மீதுதாக்குதல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it