இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும், இது எனது வாக்குறுதி – பிரதமர் மோடி !

இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும், இது எனது வாக்குறுதி – பிரதமர் மோடி !

Share it if you like it

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ. 30 லட்சம் கோடியை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்ருத் 2.O திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கட்டப்பட்ட 15 ஆயிரத்து 24 வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வீடுகள், நெசவாளர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள், பீடி சுற்றுபவர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. பிரம்மாண்டமான அந்த கோயில் திறப்பு விழா காண உள்ளதை ஒட்டி பக்தி பரவசமான சூழல் உருவாகி இருக்கிறது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அந்த ராம ஜோதி நமது நாட்டின் ஏழ்மையைப் போக்க நம்மை ஊக்குவிக்கும். நமது நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வறுமை முற்றாக ஒழியவில்லை. வறுமையை ஒழிக்கும் நோக்கில் எனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நான் பார்க்கச் சென்றேன். நான் குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற ஒரு வீட்டில் வசிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். இன்று, அதுபோன்ற வீடுகளை பார்ப்பதில் திருப்தி அடைகிறேன். இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகியுள்ளன. அவர்களின் ஆசியே எனக்கு மிகப்பெரிய சொத்து.

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு ரூ.30 லட்சம் கோடியை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்து வரக்கூடிய எனது அரசின் ஆட்சிக் காலத்திற்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இது எனது வாக்குறுதி” எனத் தெரிவித்தார்.


Share it if you like it