ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்!

ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் பலியாகினர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து துணை ராணுவப் படையினரை ஏற்றிக் கொண்டு பஹல்காம் நோக்கி ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறைக்குச் சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் 2 பேர் என மொத்தம் 39 பேர் பயணித்திருக்கிறார்கள். பேருந்து, தெற்கு காஷ்மீர் பகுதியான அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டிருக்கிறது. இவ்விபத்தில், 30-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் படுகாயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த வீரர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  


Share it if you like it