ஜப்பானில் கோயில் கட்ட நிதியுவி: தருமபுர ஆதீனம் அறிவிப்பு!

ஜப்பானில் கோயில் கட்ட நிதியுவி: தருமபுர ஆதீனம் அறிவிப்பு!

Share it if you like it

ஜப்பானில் கட்டப்படவிருக்கும் கோயிலுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருக்கிறார்.

ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில், திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சாவூரில் கடந்த 1-ம் தேதி நடந்தது. விழாவுக்கு, செந்தில் முருகன் தலைமை தாங்கினார். இதில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்பா குருமணி என்ற தகாயூகி ஹோஷி, குரு மகா சந்நிதான சுவாமிகளை பாராட்டி பேசினார். தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் தமிழ்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், வேஷ்டி, சட்டை மற்றும் புடவை ஆகியவற்றை அணிந்து வந்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தருமபுரம் ஆதீனம், “ஜப்பான் நாட்டில் 1572-ம் ஆண்டு பழமையான மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் சைவ நெறி வளர்ந்திருக்கிறது. முகநூல் வழியாக குடமுழுக்கு திருவிழாக்களை தெரிந்து கொண்டு, அந்நாட்டில் முருகன் கோயில் கட்டுகிறார்கள். சைவத் திருக்கோயில் கட்டவிருக்கிறார்கள். இதற்காக, தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபாடு செய்திருக்கிறார்கள். சைவம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். தவிர, தமிழ் மொழியும், ஜப்பான் மொழியும் வழிபாட்டு முறையில் ஒத்துப்போகிறது. ஆகவே, தமிழகத்திலுள்ள தலங்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். வீடுகளிலும் தமிழை பற்றி பேச வேண்டும். ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து தமிழ் படிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ளவர்கள் தமிழ் படிப்பதை குறைவாக கருதுகிறார்கள். பெற்றோர்கள் தமிழ் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலையை அறிவித்தால், எல்லோரும் தமிழ் படிப்பார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில், அன்னை என்பது தாய்மொழி. பிதா என்பது வடமொழி. இந்த இரண்டும் இறைவனுக்கு உகந்த மொழி” என்றார்.


Share it if you like it