மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடியவில்லை… விரக்தியில் கரூர் தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா!

மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடியவில்லை… விரக்தியில் கரூர் தி.மு.க. கவுன்சிலர் ராஜினாமா!

Share it if you like it

கரூரில் தனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி, தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்டது பள்ளப்பட்டி. பேரூராட்சியாக இருந்த இது, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 27 வார்டுகளில், 22 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, பள்ளப்பட்டி நகராட்சியைக் கைப்பற்றியது. இதன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த முனவர் ஜான் என்பவரும், துணைத் தலைவராக பள்ளப்பட்டி நகர தி.மு.க. செயலாளர் தோட்டம் பஷீர் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பள்ளப்பட்டி நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, தி.மு.க.வைச் சேர்ந்த 15-வது வார்டு உறுப்பினர் ஜமால் முகமது, தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், இதன் காரணமாக தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கவுன்சிலர் ஜமால் முகமது, “பள்ளப்பட்டி நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் கோரிக்கையை முன்வைத்து மனுக்கள் அளி்த்தேன். ஆனால், அம்மனுக்கள் மீது நகர்மன்றத் தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கும் வாய்ப்புத் தரப்படுவதில்லை. நான் 35 ஆண்டுகளாக தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கிறேன். தற்போது ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தும் எனது பகுதி மக்களின் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்ததால், கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கி இருக்கிறேன்” என்று கூறினார்.

இதே காரணத்திற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம், பொள்ளாச்சி நகராட்சியின் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்த நர்மதா என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக, தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கே மதிப்பில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. அப்படி இருக்க, மாற்றுக் கட்சிக் கவுன்சிலர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதன் காரணமாகவே பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை செய்யப்படும் பணிகள் தரமற்றவையாக இருக்கின்றன என்பதை சொல்லவும் வேண்டுமா?


Share it if you like it